சுவாதி வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண் யார்?.. கொல்ல முயற்சிப்பதாக தமிழச்சி புதிய புகார்!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட ஒரு பெண்ணை கொலை செய்ய கூலிப்படை மூலம் முயற்சிகள் நடப்பதாகவும், இதனால் அந்தப் பெண் வெளிநாட்டுக்குத் தப்பிப் போய் விட்டதாகவும் பிரான்சில் வசித்து வரும் புதுச்சேரி தமிழச்சி மீண்டும் ஒரு பரபரப்புத் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பெண் தனக்கு அனுப்பிய ஆடியோ பதிவின் சில பகுதிகளையும் அவர் அத்துடன் இணைத்துள்ளார். அந்தப் பெண்ணைக் கொலை செய்ய காவல்துறையிலேயே சிலர் முயன்றதாகவும் தமிழச்சியின் பதிவு கூறுகிறது. மேலும் அவரது குடும்பத்துக்கும் ஆபத்து இருப்பதாகவும் அந்தப் பெண் கூறுவதாக தமிழச்சியின் பதிவு கூறுகிறது.
ஏற்கனவே சுவாதியைக் கொலை செய்தது முத்துக்குமார் என்ற நபர். அவர் தஞ்சையில் பாதுகாப்புடன் தங்கியிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தமிழச்சி என்பது குறிப்பிடத்தகக்து. இந்த நிலையில் தமிழச்சியின் புதிய பதிவு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதுதான் தமிழச்சி போட்டுள்ள பதிவு:
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண் காவல்துறையில் உள்ள இருவர் கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி சென்ற பின் பல அதிர்ச்சிகர தகவல்களை தருகிறார். அவற்றில் சில இங்கு குரல் பதிவாக உள்ளது கேளுங்கள்:
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கேட்கும் அதிர்ச்சிகள் நிறைந்த ஆடியோ அது. அதன் அரசியல் அதிர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதிலிருந்து ஒரு சில வரிகள்.
".... என்னை எப்படியாவது கொன்னுடனும்னு காவல்துறையைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் முயற்சி பண்ணாங்க. அதுவும் 'ரம்ஜான் பண்டிகை' அன்னைக்கு சாகடிக்கனும்னு திட்டம் போட்டாங்க. அவங்க அனுப்பிய கூலிப்படை கிட்ட இருந்து இரண்டு முறை தப்பிச்சிட்டேன்...."
அப்படி சொல்கின்ற பெண் முஸ்லிம் கிடையாது. அவர் இந்து. அவரை கொலை செய்ய அனுப்பிய கூலிப்படையினர் காவல்துறையைச் சேர்ந்த சிலரால் அனுப்பப்பட்டவர்கள் என்று கூறுகிறார் அந்த பெண்.
பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட பெரியாரியவாதியான நான் எனக்கான மத அடையாளத்தை புறக்கணித்தாலும் நான் பிறப்பால் இந்து. எங்கள் இருவரிடமும் உண்மையை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற தன்முனைப்போடு முனைந்துள்ளோம்.
சுவாதியின் படுகொலை தொடர்பாக தமிழ்நாட்டு காவல்துறையினரால் தகவல் விசாரணை அடிப்படையில்தான் இப்பெண் விசாரிக்கப்பட்டார். அவரும் சுவாதி குறித்து அவருக்கு தெரிந்த ததகவல்களை கூறியபின் அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்யாமல் அப்பெண்ணையும் கொலை செய்துவிட காவல்துறையினரில் சிலர் முயன்றிருக்கின்றனர்.
அதற்கு பிறகு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அப்பெண் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிராக மதக் கலவரங்களை தூண்டுவதற்கான அரசியல் நகர்வுகளை அவற்றில் பார்க்க முடிகிறது.
தமிழக அரசு இதில் தலையிட்டு நடக்கும் உண்மைகளை கண்டறிய விசாரணை நடத்த முற்படுமானால், சுவாதி படுகொலை விசாரணை வேறு மாநிலத்தில் நடத்த உத்தரவாதம் கொடுத்தால் விசாரணைக்கு உரிய அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார்.
Swathi வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண்ணை கொல்ல முயற்சிக்கிறார்கள்..தமிழச்சியின் புதிய பரபரப்பு https://t.co/nhMexnbvtU pic.twitter.com/knGiF6AT4N
— Oneindia Tamil (@thatsTamil) August 18, 2016
இன்னொரு மிகப் பெரிய ஆபத்து ஒன்றுள்ளது. காவல்துறையினர் கொலை முயற்சியில் இருந்து தப்பியோடிய அப்பெண் தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விடுமோ என்ற மிகுந்த பதட்டத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து கொண்டிருக்கிறார். அதேப்போல் அவர் எந்த நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பதை அறிந்து அங்கே அப்பெண்ணை கொல்வதற்கான நடவடிக்கைகளை சமூக விரோதிகள் மேற் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
ஒரு அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் அப்பெண் துணிந்து நிற்கிறார். சாதிக்காக, மதத்திற்காக ஆணவப்படுகொலைகள் நடக்கவிடக் கூடாது இந்திய இறையாண்மைக்கு எதிராக இயங்கும் சமூக விரோதிகளை தொடர்ந்து இயங்கவிடக் கூடாது என்பதற்காகவும், பெண்களை கொலை செய்வதன் மூலம் நடத்த முற்படும் மதகலவரங்களையும் அதற்காகவே இயங்கும் கூலிப்படைகளையும் ஒழித்துக் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.
என்னிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் ப்ரெஞ்ச் மனித உரிமை மீறல் அமைப்பினர், ப்ரெஞ்ச் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ப்ரெஞ்ச் பெண்கள் அமைப்பினரிடம் சமர்ப்பித்துள்ளேன்.
என் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது நானும் படுகொலை செய்யப்பட்டாலோ மேற்குறிப்பிட்ட மூன்று அமைப்பினரும் மேற்கொண்டு நீதிமன்றத்தின் மூலம் உண்மைகளை அம்பலப்படுத்துவார்கள்.
தமிழக மக்களே!
வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்குள் நுழைந்துவிட்டோம். பெண்களாகிய நாங்கள் அரசிடம் மண்டியிடவில்லை. உங்கள் முன் நிற்கிறோம். மக்கள் சக்தியாகிய நீங்கள் மற்றும் சமூக அமைப்புகள் நீதிக்கான போராட்டத்தில் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்.
நன்றி
தோழமையுடன் தமிழச்சி
யார் இந்தத் தமிழச்சி?
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழச்சி ஏற்கனவே எழுத்தாளர் சாருநிவேதிதா குறித்த பரபரப்பை அம்பலப்படுத்தியவர் ஆவார் என்பது நினைவிருக்கலாம்.