வளைத்து வளைத்து மின்வெட்டு.. பரிதவிக்கும் சென்னைப் புறநகர்கள்!
சென்னை: சென்னை புறநகர்கப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து மின் விநியோகம் தடைபட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தாம்பரம் பகுதியில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் விநியோகம் தடைபட்டது. கடும் வெயில் காரணமாக இரவில் புழுக்கம் அதிகம் இருக்கும் நிலையில் மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அதேபோல தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் உள்ள டிபி மருத்துவமனையில் உள்ள டிரான்ஸ்பார்மர் இரவில் பழுதடைந்ததால் அங்கும் மின் விநியோகம் தடைபட்டு நோயாளிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
தாம்பரம் கடப்பேரி பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மின் தடை ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
அதேபோல, குரோம்பேட்டை ராதா நகர், நெமிலிச்சேரி பாரதி நகர், ஜமீன் ராயப்பேட்டை, அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினமும், நேற்றும் பகலில் அடுத்தடுத்து மின் தடை ஏற்பட்டது. பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை மின்சாரம் வரவில்லை.
2 இடங்களில் அதிக மின் அழுத்தத்தால் மின்சார கேபிள்கள் எரிந்ததன் காரணமாக மின் விநியோகம் தடைபட்டதாக மின்வாரிய ஊழியர்கள் கூறியுள்ளனர்.