மீண்டும் த.மா.கா உதயம்... மீண்டும் அதே சைக்கிள் சின்னம்- திருச்சியில் ஜி.கே.வாசன் அறிவிப்பு
திருச்சி: ஜி.கே.வாசனின் கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமாக சைக்கிள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் பொன்மலை ஜி கார்னரில் இன்று தனது புதிய கட்சி அறிவிப்பிற்கான மாநாட்டினை தொடங்கினார். மாநாட்டை ஒட்டி கடந்த 2தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஜி.கே.வாசன் தன்னுடைய புதிய கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார் ஜி.கே.வாசன். இன்று மாலை 5 மணியளவில் கட்சியின் கொடியை தியாகி அருணாசலம் ஏற்ற தொண்டர்கள் ஆராவாரத்திற்கு இடையே மாநாட்டை தொடங்கினார் ஜி.கே.வாசன்.
திருச்சியில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து 8 ஆயிரம் வாகனங்களில் ஜி.கே.வாசன் கட்சியினர் குவிந்துள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள் வேலூர் ஞானசேகரன் கோவை தங்கம், விடியல் சேகர், திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா ஆகியோர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
விழா மேடையில் ஏறிய வாசன், தொண்டர்களின் ஆராவாரத்திற்கு இடையே கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அறிமுகம் செய்தார்.
வாசன் வழிபாடு
மாநாட்டை ஒட்டி முன்னதாக ஜி.கே.வாசன் தனது குலதெய்வகோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
மாநாட்டு பந்தலை பார்வையிட்ட வாசன்
இந்தநிலையில் நேற்றுமாலை சரியாக 5 மணிக்கு ஜி.கே.வாசன் முன்னனி தலைவர்களுடன் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தார். முன்னணி தலைவர்கள் வந்தனர்.
பலூனை பறக்கவிட்ட வாசன்
அதைதொடர்ந்து பொதுக்கூட்ட மைதானத்தில் 100 கிலோ எடையுள்ள பிரமாண்ட பலூனை ஜி.கே.வாசன் ஆகாயத்தில் பறக்கவிட்டார். அப்பொழுது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். பின்னர், பொதுக்கூட்ட மேடையை ஜி.கே.வாசன் சுற்றிப்பார்த்தார். அதன்பின்பு ஜி.கே.வாசன் கட்சி முன்னனி தலைவர்களுடன் மேடைக்கு அருகில் உட்கார்ந்து ஆலோசனை மேற்கொண்டார்.
மழையிலும் குவிந்த தொண்டர்கள்
திருச்சி மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரம் பேருந்துகள், 8 ஆயிரம் கார்கள், 5 ஆயிரம் வேன்கள், ஜி.கே.வாசன் கட்சியினர் இன்று திருச்சிக்கு வந்துள்ளனர். மழை கொட்டி வரும் நிலையிலும் பல லட்சம் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
7 இடங்களில் வாகனங்கள் நிறுத்தம்
விழாவிற்கு வரும் வாகனம் நிறுத்துவதற்காக திருச்சியில் 7 இடங்களை திருச்சி மாநகர போலீசார் அமைத்துள்ளார்கள். மேலும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகைதரும் தொண்டர்களுக்காக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட மேடை
திருச்சி மாநகருக்குள் நுழையும் 7 நுழைவு வாயில் பகுதிகளில் கட்சி தொண்டர்களை வரவேற்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடை 60 அடி நீளத்தில் 40 அகலத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம், நாடாளுமன்றம்
மேடையின் இடது புறத்தில் சென்னை தலைமை செயலகத்தின் மாதிரியும், வடது புறத்தில் டெல்லி நாடாளுமன்றம் மாதிரியும் கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளது மேடைக்கு முன்புறம் 32 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
கொடியேற்றம்
பொதுக்கூட்ட நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது மழை காரணமாக மாலை 5 மணிக்கு தொடங்கியது. 32 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை தியாகி அருணாசலம் ஏற்றி வைக்க ஜி.கே.வாசன் மாநாட்டை தொடங்கிவைத்தார்.
ஜி.கே.வாசன் உரை
கொட்டும் மழையிலும் தொண்டர்களின் ஆராவாரத்திற்கு இடையே உரையாற்றிய ஜி.கே.வாசன் நம்முடைய இயக்கம் இன்றுமுதல் தமிழ் மாநில காங்கிரஸ் என்று அழைக்கப்படும் என்றார். கட்சியின் சின்னம் சைக்கிள் என்றும் அவர் கூறினார். அப்போது தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர். காமராஜர் புகழ் ஓங்குக. மூப்பனார் புகழ் ஓங்குக என்று கூறினார் ஜி.கே.வாசன். சொன்னபடி அடாது மழை பெய்தாலும் விடாமல் மாநாட்டை தொடங்கி தனது பலத்தை காட்டிவிட்டார் ஜி.கே.வாசன்.