மதுவிலக்கை அமல்படுத்த கோரி 1 கோடி பேரிடம் கையெழுத்து... ஆளுநரிடம் சமர்பித்தார் ஜி.கே.வாசன்
சென்னை: தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஒருகோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்தை ஆளுநரிடம் ரோசய்யாவிடம் நேரில் சமர்பித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மதுவினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி பூரண மது விலக்கை அமல்படுத்துவதற்கு ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை வாசன் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. ஜி.கே.வாசனும் மக்களுக்காக மக்களை நோக்கி என்ற திட்டத்தின் படி பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் மதுவினால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக் கோரி வந்தார்.
இந்நிலையில், இன்று மாலை ஜி.கே.வாசன் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அங்கு ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மனு ஒன்றை கொடுத்தார். மேலும் ஒரு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்தையும் ஆளுநரிடம் வாசன் சமர்ப்பித்தார்.