தமிழக மீனவர்கள் 28 பேர் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் 28 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியிலிருந்து நாட்டுப்படகிலும், விசைப்படகிலும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே சனிக்கிழமை அன்று மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை நாட்டுப்படகில் இருந்த 23 மீனவர்களையும், விசைப்படகில் இருந்த 5 மீனவர்களையும் தாக்கி, அவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து, சிறைப்பிடித்துச் சென்றனர்.
இச்செயல் இலங்கை கடற்படையின் தொடர் அராஜகப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் 68 மீனவர்களையும், அங்கு இருக்கின்ற 78 மீன்பிடி படகுகளையும், தற்போது சிறைப்பிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட ஒரு விசைப் படகு மற்றும் 2 நாட்டுப் படகுகளையும் உடனடியாக தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு மீனவ குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.