தவ வாழ்வு வாழும் ஜெ.வுக்கு கொடநாடு எஸ்டேட் எதற்கு?: ஜி. ராமகிருஷ்ணன்
திருவண்ணாமலை: தவ வாழ்வு வாழ்வதாக மேடைதோறும் கூறி வரும் ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்கள் எதற்கு? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வனை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
அரசியல்
அரசியல் ஒன்றும் வியாபாரம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வது தான் அரசியல். அதிமுக ஆட்சியில் நடத்துனர் பணி முதல் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி வரை பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.
ஊழல்
அதிமுகவின் ஊழல் ஆட்சிக்கு மாற்று வேண்டும். ஆனால் அந்த மாற்று திமுக கிடையாது. ஊழல் விஷயத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
ஜெயலலிதா
தவ வாழ்வு வாழ்வதாக மேடைதோறும் கூறி வரும் ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்கள் எதற்கு? மதுரையில் 22 ஆண்டுகளாக நடந்த கிரானைட் ஊழலில் அதிமுக, திமுகவுக்கு தொடர்பு இருக்கிறது.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடைகளால் தமிழ் மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். மது ஆலைகளை நடத்தும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளால் மதுவிலக்கை கொண்டு வர முடியாது. மதுவிலக்கு குறித்து அவர்களுக்கு இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. ஆனால் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூடுவோம்.