சட்டசபை தேர்தலில் தமிழருவி மணியனின் இயக்கம் தனித்து போட்டி- சனிக்கிழமை வேட்பாளர் பட்டியல்
சென்னை: 2016 சட்டசபை தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் தனித்து களம் காண்கிறது. இதற்கான வேட்பாளர்களை சனிக்கிழமையன்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் தமிழருவி மணியன் அறிவிக்க உள்ளார்.
2014 லோக்சபா தேர்தலில் போது தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க பாடுபட்டார் தமிழருவி மணியன். மணிக்கணக்கில் கட்சித்தலைவர்களிடம் பேசி பேசி, வடக்கும் தெற்குமாய் திரும்பியபடியே கூட்டணியில் இணைந்தனர் அரசியல் கட்சியினர். ஒருவழியாக ஒன்றிணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர் காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்கள்.
2016 சட்டசபை தேர்தலிலும் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக புதிய கூட்டணி அமையும் என்றும் வைகோவை முதல்வர் ஆக்க பாடுபடுவோம் என்றும் தமிழருவி மணியன் கூறி வந்தார். தொடர்ந்து ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியை விட்டு பிரிந்து வரவேண்டும் என்று அழைத்தார்.
தனித்து போட்டி
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 100 நாட்களிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்த கையோடு உள்ளாட்சி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக கூறி வேட்பாளர்களை அறிவித்தார் தமிழருவி மணியன்.
சட்டசபை தேர்தலில்
தமிழ் இன நலனுக்கு எதிராக காங்கிரசை விட மிக மோசமான அணுகுமுறையையே பா.ஜ. க., அரசு பின்பற்றுகிறது. எந்த வகையிலும் தமிழ் இனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயற்படாத தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காந்திய மக்கள் இயக்கத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்த தமிழருவி மணியன் தற்போது 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் யார்
சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள தொகுதிகள், வேட்பாளர்கள் யார் யார் என்று சனிக்கிழமையன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட உள்ளார் தமிழருவி மணியன்.