சுத்தமானவர்கள் நிறைந்த கட்சி சார்பில் போட்டியிடுவதில் மகிழ்ச்சி.. கங்கை அமரன் நெகிழ்ச்சி
சுத்தமான நபர்கள் நிறைந்துள்ள கட்சி பாஜக, அந்த கட்சியின் சார்பில் நான் போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது, என கங்கை அமரன் தெரிவித்தார்.
சென்னை: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கை அமரன், இன்று, கமலாலயத்தில், பாஜக தமிழிசை தலைவர் தமிழிசையிடம் வாழ்த்து பெற்றார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்த தமிழிசைக்குப் பதில், திடீரென கங்கை அமரன் வேட்பாளராகியுள்ளார். இதனால் தமிழிசை அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தமிழிசையுடன் இன்று கங்கை அமரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழிசை சந்தோஷமாகத்தான் காணப்பட்டார். செய்தியாளர்களிடம் கங்கை அமரன் பேசியதிலிருந்து:
சுத்தமான கட்சி
சுத்தமான நபர்கள் நிறைந்துள்ள கட்சி பாஜக, அந்த கட்சியின் சார்பில் நான் போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை வேட்பாளராக பரிந்துரை செய்த தமிழிசைக்கு நன்றி.
கனவு காண தொடங்கி விட்டேன்
நான் இப்போதே சட்டசபையில் எந்த சீட்டில் அமருவேன் என கனவு காணத் தொடங்கிவிட்டேன். ஏனெனில் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.
இளையராஜா போல மாற்றம் தருவேன்
மக்கள் மாற்றத்தைவிரும்புகிறார்கள். இப்படித்தான் இசையில் மாற்றத்தை விரும்பிய நேரத்தில் இளையராஜா அந்த மாற்றத்தை கொடுத்தார். அதேபோல பாஜகதான் உண்மையான மாற்றத்தை கொடுக்க முடியும்.
மகிழ்ச்சியாக இருக்கிறது
இப்போதே தொண்டர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, எத்தனை பேர் எங்கு வர வேண்டும் என ஆர்வத்தோடு கேட்கிறார்கள். பொதுமக்கள் பலரும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.