நடன இயக்குநர் லலிதாமணி வீட்டில் கஞ்சா செடி... போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் திரைப்பட பெண் நடன இயக்குநர் லலிதாமணிக்கு சொந்தமான வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நடன இயக்குனர் லலிதாமணிக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி வீடு வளசரவாக்கம் வள்ளியம்மை நகர், சாஸ்தா நகர் முதல் தெருவில் உள்ளது.
இங்கு குறும்படம் எடுப்பவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் நூற்றுக் கணக்கில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.
மொட்டை மாடியில் கஞ்சா செடி
இங்கு மொட்டை மாடியில் தொட்டிகளில் கஞ்சா செடி வளர்ப்பதாகவும், 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடிகள் வளர்ந்து இருப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸ் ரெய்டு
அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டுக்கு சென்று மொட்டை மாடியில் இருந்த செடிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அதனையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், 5 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா வளர்த்தவர் அபிஷேக்
இது தொடர்பாக, அங்கு குடியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், நடன இயக்குநர் லலிதாமணியின் உறவினர் அபிஷேக் என்பவர் கஞ்சா செடிகளை வளர்த்தது தெரியவந்தது.
தலைமறைவு
சினிமாவில் உதவி இசையமைப்பாளராக இருக்கும் அந்த நபர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.