சென்னையில் எங்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது? டிவி சேனல் ஸ்டிங் ஆபரேசனில் அம்பலம்
சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதை தமிழ் செய்தி சேனல் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
புதியதலைமுறை தொலைக்காட்சி சேனல் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியுள்ளது. காமிராவை மறைத்து வைத்தபடி, கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்களுக்கு நிருபர்களை அனுப்பி ரெக்கார்ட் செய்துள்ளது அந்த சானல்.
சென்னை லஸ்கார்னரிலுள்ள ஒரு கல்லூரி அருகே, கோயம்பேட்டிலுள்ள பிரபல தியேட்டர் அருகே பைக் மற்றும் ஆட்டோவில் வந்து கஞ்சா கொடுத்துவிட்டு செல்வது அம்பலமாகியுள்ளது. போன் செய்தால் வந்து வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட்டு சிட்டாக பறந்துவிடுகிறார்கள் கஞ்சா ஏஜென்டுகள். இதற்கு பெயர் 'பாசிங் சேல்'. பாக்கெட் ஒன்று ரூ.100 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.
புளியந்தோப்பு பகுதியிலுள்ள ஒரு பூங்காவில் போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டிவி சேனல் கூறுகிறது. அங்கு பெண்களும், ஆண்களும் மீன் விற்பதை போல வரிசையாக அமர்ந்து கஞ்சா விற்கிறார்கள். இதேபோல மெரினா பீச் அருகேயும் பெண்கள் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். சைதாப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்தே கஞ்சா விற்பனை நடைபெறுவதை இந்த ஸ்டிங் ஆபரேஷன் அம்பலமாக்கியுள்ளது.