10 பேர் 'இந்து மதம்' திரும்பும் நிகழ்ச்சி- சென்னையில் பரபரப்பு!
சென்னை: பிற மதங்களில் இருந்து தாய்மதமான இந்து மதத்துக்கு 10 பேரை மதம் மாற்றுவதாகக் கூறி இந்து மக்கள் கட்சியினர் யாகம் மற்றும் சடங்குகள் நடத்தியதால் சென்னையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மேற்கு மாம்பலம் காஞ்சி காமகோடி பீடம் சங்கட மட கோவிலான காமாட்சி கோவிலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சுமார் 100 பேர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களில் இருந்து விலகி மீண்டும் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப உள்ளதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்திருந்தது.
ஆனால் திருவள்ளூர் மாவட்டம் மிஞ்சூர் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் சேர்ந்த 10 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சிக்கு ஒரு காரில் அழைத்து வரப்பட்டனர். அவர்களது இயற்பெயர் ராஜேந்திரன்-அன்னக்கிளி, ஜெயராமன்-லட்சுமி, சேகர்-தெய்வநாயகி, சுப்பிரமணி- நாகம்மாள், ஜமுனா, மவுலி என்றும் கூறப்பட்டது.
இந்த 10 பேரையும் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்.
பிறகு 10 பேரும் கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். காமாட்சி அம்மன் சன்னதி முன்பு 10 பேரும் அமர வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 10 பேரையும் மீண்டும் இந்துக்களாக மாற்றுவதற்காக சடங்குகள் நடத்தப்பட்டன.
காமாட்சி அம்மன் கோவில் குருக்கள் அவர்கள் 10 பேர் மீதும் அட்சதை தூவினார். பிறகு தாய் மதத்துக்கு வரவேற்பதற்காகக் கூறி வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. இதன் மூலம் 10பேரும் உரிய முறைப்படி அதிகாரப்பூர்வமாக மீண்டும் இந்துக்களாக மாறி விட்டதாக அறிவிக்கப்பட்டது.
மத மாற்ற நிகழ்ச்சியை நடத்திய ராம ரவிக்குமார் கூறுகையில், இன்று மீண்டும் இந்து மதத்துக்கு வந்துள்ள 10 பேரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். 2017-ம் ஆண்டுக்குள், வேற்று மதங்களுக்கு சென்ற சுமார் 1 லட்சம் பேரை மீண்டும் தாய் சமயமான இந்து சமயத்துக்கு அழைத்து வருவோம். இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
முன்னதாக இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹிம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்தார். அதில், 'இந்து மக்கள் கட்சி நடத்தும் 'தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிக்கு' தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், 'தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக சென்னை அண்னாநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கட்சியின் மாநில நிர்வாகிகள் 3 பேருடன் புறப்பட தயாரானார். அப்போது போலீசார் அவர்களை நிகழ்ச்சி செல்ல திடீரென தடை விதித்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் உள்பட 4 பேரையும் கைது செய்து விட்டு காவலில் வைத்தனர்.