தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திடீர் சந்திப்பு
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முடிந்த நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று மாலை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் திடீரென்று தனி அணியாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுமாறு அவர்கள் கேட்டு கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கள் மாவட்ட ஆதரவு அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது தங்கள தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நேற்று மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் நிலவும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசினார். சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆளுநர் கேட்டறிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.