திருமணத்துக்கு மறுத்த காதலி.. கத்தியால் குத்திக்கொன்று போலீசில் சரணடைந்த காதலன் !
ஆரணி: ஆரணி அருகே திருமணத்துக்கு மறுத்ததால் காதலியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன் போலீசில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
ஆரணி அருகே உள்ள துர்மந்தாங்கல் ஏரிக்கரை அருகே உள்ள பாறையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் ஒரு இளம் பெண்ணின் சடலம் இருப்பது நேற்று மாலை தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆரணி டி.எஸ்.பி. ஜெரினா பேகம், காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சடலமாகக் கிடந்த பெண்ணிடமிருந்து அவருடைய கல்லூரி அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது. அதில் அவருடைய பெயர் மோனிகா (20) என்றும் அவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அக்ஸிலியம் மகளிர் கல்லூரியின் விடுதியில் தங்கி பி.ஏ.ஆங்கிலம் படித்துவந்தது தெரியவந்தது.
மேலும், மேலும் இதுபற்றி கல்லூரி நிர்வாகத்துக்கு, போலீசார் தகவல் தெரிவித்து விசாரித்ததில், அவர் ஆரணி அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் மதியழகனின் மகள் என்பது தெரியவந்தது. பின்னர், இறந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளின் உடலைப் பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து, மாணவியின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறை பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் ஆரணி அடுத்த புங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த கோகுல்நாத் (20) என்பவர் தாம் தான் மோனிகாவை கொலை செய்ததாக போளூர் போலீஸ் நிலையத்தில் இரவில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மாணவி மோனிகா கோகுல்நாத்தை காதலித்து வந்ததாகவும், ஆனால், அவர் திடீரென வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக சொன்னதால், அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் கோகுல்நாத் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.