விளையாட்டை யாரும் கண்டுக்கிறதில்லை..பள்ளிகளில் மைதானமும் இல்லை.. இது விஜயகாந்த் கவலை!
பள்ளிக் கூடங்களில் விளையாட்டு ஆசிரியர்களை நியமித்து விளையாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: பள்ளிக் கூடங்களில் கல்வி கற்பிப்பதை மட்டும் முதன்மை படுத்தாமல் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.
பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கான உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமியக்க வேண்டும். அப்போதுதான் நாளை நாட்டைக் காக்க போகும் மாணவர்கள் சிறப்பாக வளர்வார்கள் என்பதை தேமுதிக விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மைதானங்கள் இல்லாப் பள்ளிகள்
பள்ளிகளில் கல்வி கற்பதை மட்டும் தான் முதன்மை படுத்துகின்றனர். அத்துடன் உடற்பயிற்சியும் கற்பித்து, விளையாட்டுக்கென்று உடற்பயிற்சி ஆசிரியர் இருக்க வேண்டும். அரசு நிர்ணயப்படி பள்ளி பரப்பளவு மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
சிபிஎஸ்சி என்ன சொல்கிறது?
CBSE வரைமுறைப்படி, மாநில பள்ளிகள் 14,400 சதுர அடி பரப்பளவு சென்னையிலும், 24,000 சதுர அடி மாநகராட்சிக்கு வெளியில் உள்ள பள்ளிகளிலும், மாவட்ட தலைநகரங்களில் 19,200 சதுர அடி பரப்பளவில் பள்ளி கட்டிடங்களும், விளையாட்டு திடலும் இருக்க வேண்டும் என்று கல்வி விளையாட்டு துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி விதிப்படி மைதானம் இருக்கிறதா?
ஆனால் 26 மாநிலங்கள் மற்றும் 87 மாநகரங்களில் 7 முதல் 17 வயது மாணவ, மாணவியர்கள் குறித்த ஆய்வில், வரையறுக்கப்பட்ட பரப்பளவு விளையாட்டு மைதானம் இல்லை என்றும், மாணவ, மனைவியர் போதிய உடல் எடை மற்றும் உயரம் மிகவும் குறைவாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதானங்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பள்ளி பருவத்திலேயே உடற்பயிற்சி செய்து மாணவ, மாணவியர் உடல் உறுதியுடன் இருந்திட உடற்பயிற்சி அவசியம். பெரும்பாலும் மாநகராட்சிகளில் பயிலும் மாணவர்கள் வாகன வசதிகளைத்தான் உபயோகிக்கிறார்கள். பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பள்ளிகளில் உள்ள கட்டிட கட்டுமான வசதிகள், நூலக வசதிகள், ஆய்வக வசதிகள், கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ஆனால் உடற்பயிற்சிக்கு என்று தனியாக அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனரா என்கிற சந்தேகம் வருகிறது. எந்த அடிப்படையில் சென்னை மற்றும் பெருநகரங்களில் விளையாட்டு மைதான வசதி இல்லாமல் பள்ளிகள் செயல்பட அரசு அனுமதிக்கிறது என்கிற அய்யப்பாட்டினை தீர்வுகாண வேண்டும்.
உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
சென்னை மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விளையாட்டு மைதானங்கள் நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவு இல்லாத பள்ளிகளின் விவரங்களை பார்வையிட்டு, உடற்பயிற்சி ஆசிரியர் இருப்பதையும், விளையாட்டு சாதனங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்கிற நிலையையும் அரசு தெரிவிக்கவேண்டும். இன்றைய பள்ளி மாணவ, மாணவியர் தான் இந்த நாட்டை காப்பாற்ற போகும் வீரர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் என்பதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.