எங்க கட்சியில்தான் இளைஞர்கள் அதிகம்.. பெருமிதம் காட்டும் ஜி.கே.வாசன்
சென்னை: தமிழக கட்சிகளிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில்தான் இளைஞர்கள் அதிகம் உள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
புதிதாகப் பிறந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதைத் தீவிரப்படுத்துவதற்காக இளைஞரணி பொறுப்பாளர் எம். யுவராஜா தலைமையில் பேருந்துப் பிரசாரப் பயணம் தொடங்கியுள்ளது.
இந்தப் பயணத்தை சென்னை ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை அருகே இன்று ஜி.கேவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,
திருச்சியில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தொடக்க விழா பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருச்சியில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் இந்தியத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினோம். கடந்த 50 நாள்களுக்குள் தமிழகம் முழுவதும் 32 லட்சம் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மகத்தான சாதனையாகும்.
தமிழக அரசியல் கட்சிகளில் அதிகமான இளைஞர்களைக் கொண்ட கட்சி தமாகா மட்டுமே. திருச்சி பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களில் 50 சதவீதம் பேர் இளைஞர்கள். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் தமாகாவில் உறுப்பினர்களாக இணைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்காக யுவராஜா தலைமையில் இளைஞரணி பொறுப்பாளர்கள் நடத்தும் இந்த பேருந்து பிரசாரப் பயணம் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு பெறுகிறது.
20 மாவட்டங்கள், 103 சட்டசபைத் தொகுதிகள், 6 மாநகராட்சிகள், 500-க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் வழியாக 2,000 கிலோ மீட்டர் இந்தப் பயணம் செல்கிறது. இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் தமாகாவில் இணைவார்கள் என்றார் ஜி.கே.வாசன்.