ஜெயலலிதாவின் பிடிவாதம்.. சின்னத்தால் சின்னாபின்னமாகிப் போன அதிமுக.. நாகரீகமாக விமர்சித்த வாசன்
இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்திய அதிமுக தற்போது சின்னத்திற்காக சின்னாபின்னமாகியுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்திய அதிமுக தற்போது சின்னத்திற்காக சின்னாபின்னமாகியுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட, வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார்.
அப்போது இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருப்பது குறித்து ஜி.கே.வாசன் விமர்சித்தார். கட்சியின் பெயரை கூட சொல்லாமல் நாகரீகமாக ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
சின்னத்திற்காக சின்னாபின்னமாகி உள்ளது
அவர் கூறியதாவது, கடந்த தேர்தலில் குறிப்பிட்ட சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய பெரிய கட்சிகள் எல்லாம் தற்போது சின்னத்திற்காக சின்னாபின்னமாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாகவே அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.
கூட்டணி வைத்தால் தான் வெற்றி
பெரிய கட்சிகள் கூட உள்ளாட்சி தேர்தலில் தனியாக வெல்ல முடியும் என்று மேடைகளில் மட்டும் தான் இனி பேச முடியும். கூட்டணி வைத்தால் தான் வெற்றி கிடைக்கும்.
நாம் ஆளப்போகும் கட்சி
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்காக பல கட்சிகள் த.மா.கா.வை தேடி வரும். நாம் ஆளப்போகும் கட்சி. இதனால் அனைவரும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இவ்வாறு ஜிகே.வாசன் கூறினார்.
வாசனை கட்டாயப்படுத்திய ஜெ.
2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பினார் ஜி.கே.வாசன். அப்போது அதிமுகவின் ஆஸ்தான சின்னமான இரட்டை இலைச்சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என ஜெயலலிதா, ஜி.கே.வாசனை கட்டாயப்படுத்தினார்.
நாகரீக விமர்சனம்
இதனை ஏற்க மறுத்த ஜி.கே.வாசன் அதிமுக கூட்டணியில் சேராமல் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டு பெரும் வீழ்ச்சியை சந்தித்தார். அந்த அடியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் இன்னும் எழவில்லை. தன்னுடைய வீழ்ச்சிக்கு காரணமானவர்கள், தன்னை நாசமாக்கப் பார்த்தவர்கள் என்ற போதிலும் கூட அவர்களின் பெயரை கூட சொல்லாமல் நாகரீகமாக விமர்சித்துள்ளார் வாசன் என்பது குறிப்பிடத்தக்கது.