தமிழக காங்கிரஸ் உடையுமா? கேள்விக்கு "நோகமெண்ட்ஸ்" சொன்ன ஞானதேசிகன்!
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உடையக் கூடும் என்பதை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஞானதேசிகன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக 3 ஆண்டுகாலம் பதவி வகித்த ஞானதேசிகன் நேற்று இரவு திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படம் போடக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் தடை விதித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஞானதேசிகன், கட்சி மேலிடம் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கொட்டித் தீர்த்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஞானதேசிகன் பட்டும் படாமலேயே மழுப்பலாக பதிலளித்து வந்தார். அப்போது, உங்கள் ராஜினாமாவால் காங்கிரஸ் கட்சி உடையுமா? என்று பட்டென ஒரு செய்தியாளர் கேள்வி கேட்க சற்றே ஆடிப்போனார் ஞானதேசிகன்.
ஆனால் கூடியிருந்த ஜி.கே.வாசன் ஆதரவாளர்களோ இந்த கேள்விக்காக கைதட்டி ஆராவாரம் செய்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட ஞானதேசிகன், கட்சி உடையும் உடையாது என்றெல்லாம் சொல்லாமல் "நோ கமெண்ட்ஸ்" என்று மறைமுகமாக பதிலளித்திருக்கிறார்.
இருப்பினும் காங்கிரஸ் கட்சி உடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அங்கு கூடியிருந்த ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் இதற்கும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.