மூப்பனார் போன்ற தலைவர்களை மதிக்காவிட்டால் காங்கிரஸ் உருப்படாது: ஞானதேசிகன் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கட்சிக்காக பாடுபட்ட மூப்பனார் போன்ற தலைவர்களை மதிக்காமல், மாநிலத்தின் உணர்வுகளை மதிக்காமல் இருந்தால் காங்கிரஸ் கட்சி வளராமல் உருப்படாமல் என்று போய்விடும் என்று தமிழக காங். தலைவர் பதவியில் இருந்து விலகிய ஞானதேசிகன் சாபமிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஞானதேசிகன் இன்று செய்தியாளர்களிடம் பதவி விலகியது ஏன் என்று விளக்கம் அளித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞானதேசிகன் அளித்த பேட்டி:
எனக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகாலம் அவர்களது நம்பிக்கையை வீணாக்காமல் செயல்பட்டேன்.
30 கூட்டங்கள்
கடந்த 3 ஆண்டுகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற 10 கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். 3 ஆண்டுகளில் மொத்தம் 30 பொதுக்கூட்டங்களை இளங்கோவன், நாராயணசாமி போன்றோரை வைத்து நடத்தியிருக்கிறேன்.
கட்சி பெயரை காப்பாற்றிவிட்டேன்
என் அரசியல் வாழ்க்கையில் ஜி.கே. மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசனாலும் சோனியாவின் ஆசியாலும் 2 முறை ராஜ்யசபா எம்.பி. கிடைத்தது. நான் கட்சியின் பெயரை காப்பாற்றிய திருப்தியோடு பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
மதிப்பே இல்லை..
கடந்த 3 ஆண்டுகாலம் எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நான் ஆளானது இல்லை. என்னைப் பொறுத்தவரையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி என்பதை காங்கிரஸ் மேலிடம் மதிக்க வேண்டும்.
ஆலோசனை கேட்பதே இல்லை..
ஒரு கட்சியின் மாநிலத் தலைவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் அந்தக் கட்சியை நடத்த முடியாது. கடந்த 3 ஆண்டுகாலத்தில் பல சங்கங்கடங்கள் எனக்கு இருந்தன. அவற்றையெல்லாம் நான் வெளியில் ஒருபோதும் சொன்னதில்லை.
ஒருத்தரும் வருவது இல்லை
10 ஆண்டுகாலம் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படாமல் இருந்தார்கள். நான்தான் போராடி மாவட்ட தலைவர்களை பொதுச்செயலர்களை நியமிக்க வைத்தேன். ஆனால் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்துக்கு இவர்களில் பெரும்பாலானோர் வருவதே இல்லை. 3 முறை சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தியும் பலரும் வரவில்லை.
கண்டிப்பதே இல்லை..
இதைக் கண்டிக்க வேண்டிய காங்கிரஸ் மேலிடமோ கண்டிக்கவே இல்லை. நான் கட்சி தொடர்பாக புகார்கள் கொடுத்த போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
ஆலோசிக்கவே இல்லை
லோக்சபா தேர்தல் கூட்டணியின் போது காங்கிரஸ் மேலிடம் யாருடன் கூட்டணி பேசுகிறார்கள் என்பது முதல்நாள் வரை எங்களுக்குத் தெரியாது. இதையும் கூட டெல்லியில் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள நேரிட்டது.
அதிகாரமே கிடையாது
தேர்தல் கூட்டணி குறித்து என்னிம் ஆலோசிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் மாநிலத் தலைவராக இருந்த போதும் எனக்கு போதிய அதிகாரம் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.
திடீர் நியமனம்
அண்மையில் புதியதாக ஒரு பொதுச்செயலரை திடீரென என்னை கேட்காமல் அறிவித்தார்கள். அது எப்படி சரி என்று கேட்டதற்கு அப்படித்தான் என்கிறார்.
சிஸ்டம் மாறலைன்னா..
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிஸ்டம் மாறாவிட்டால் எதிர்காலம் மிக சிக்கலாக இருக்கும்.
மதிக்க வேண்டும்
எந்த ஒரு கட்சியுமே அக்கட்சியின் மாநில தலைவரை மதிக்க வேண்டும். மாநில உணர்வுகளை மதிக்க வேண்டும்.
மூப்பனார் மாதிரி தலைவர்களை முன்னிறுத்த வேண்டும்
அதேபோல் கட்சிக்காக மாநிலத்தில் பாடுபட்ட தலைவர்களை (ஜி.கே. மூப்பனார்) மதிக்க வேண்டும். இப்படிப்பட்ட தலைவர்களை முன்னிறுத்தாமல் ஒரு இயக்கம் வளரவே முடியாது.
இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.