'கடவுளே, அந்த கற்பழிப்புக் குற்றவாளியைக் கொல்ல எனக்கு அனுமதி கொடு!' - டாப்சி ஆவேச பேட்டி
சென்னை: ஒரே ஒரு கொலை செய்ய எனக்கு கடவுள் அனுமதி கொடுத்தால், நிர்பயாவைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு பேட்டியளித்திருக்கும் அந்த குற்றவாளியை நானே கொல்வேன் என்று நடிகை டாப்சி ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
டெல்லியில் 2012-ல் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவரை குற்றுயிராக வெளியே தூக்கி வீசிவிட்டு சென்றனர். மருத்துவமனையில் அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. டெல்லியில் வரலாறு காணாத போராட்டங்கள் நடந்தன.
கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் முகேஷ் சிங்கும் கைதானார். இவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பி.பி.சி.4 குழுவினர் ஜெயிலுக்கு சென்று முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்தனர். அப்போது மாணவி கற்பழிப்புக்கு உடன்பட்டு இருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று பேட்டி அளித்து இருந்தான். இந்த பேட்டி பெரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து இப்பேட்டியை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது.
முகேஷ்சிங் பேட்டிக்கு நடிகை டாப்சியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "முகேஷ்சிங் கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடவுள் என்னை ஒரே ஒரு கொலை செய்ய அனுமதித்தால் நானே அந்த கற்பழிப்பு குற்றவாளியை கொலை செய்து என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.
குற்றம் செய்தவர்கள் திருந்த வேண்டும் என்றுதான் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் முகேஷ் சிங் போன்றவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள் உயிரோடு இருக்கவே கூடாது," என்றார்.