கோகுல்ராஜ் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சென்னை ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்வதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உள்பட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மர்மான முறையில் இறந்தார்.
எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தினால் ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 725 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜாமினில் வெளிவந்துள்ள யுவராஜ் உள்பட 17 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்வதால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.