தகுதிக்கேற்ப ஊதியம் என்பது போல, தகுதிக்கேற்ப பொறுப்புகளாம்.. வேற யாரு, "மேட்" பேரவை தீபாதான்!
எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவையில் தகுதிக்கேற்ப பொறுப்புகள் வழங்கப்படும் என்று அந்தப் பேரவை தலைவர் தீபா தெரிவித்தார்.
சென்னை: எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவையில் தகுதிகேற்ப பொறுப்புகள் வழங்கப்படும் என்று தீபா தெரிவித்தார். மேலும் அவர்கள் கட்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்து கட்சித் தலைமைக்கு அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளே கமுக்கமாக அரசியல் செய்து வரும் நிலையில், தீபா பேரவை பண்ணும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று எம்ஜிஆர்-அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தீபா தொடங்கினார். அவரைப் பார்க்கவும் ஏகப்பட்ட கூட்டம்.
மாதவன் பில்டப்
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் தீபா வெற்றி பெற்றால் அவரை முதல்வராக பதவியேற்க அழைக்க அமைச்சர்கள் க்யூ கட்டி வருவர் என்று அவரது கணவர் மாதவன் பில்டப் செய்தார். இந்நிலையில் தேர்தலே ரத்தாகிவிட்டது.
கணவன் மனைவி சண்டை
அதேசமயம், அவருக்கும் மாதவனுக்கும் திடீர் சண்டை. மாதவன் புதுக் கட்சி தொடங்கப் போவதாக கூறி கலகலப்பை ஏற்படுத்தினார். தீபாவோ, கணவரை வீட்டுக்குள்ளேயே சேர்க்காமல் விரட்டினார்.
கெத்து குறையலையே
இருந்தாலும் தனது கெத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறார் தீபா. செய்தியாளர்களிடம் அவர் சமீபத்தில் பேசுகையில், தமிழகம் முழுவதும் மக்கள் பணியாற்றி விசுவாசிகள், அவர்கள் செய்த கட்சிப் பணிகள் மற்றும் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளின் நகல்களை குறிப்பிட்ட தேதிகளில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதிக்கேற்ப பதவியாம்
இதை நான் பரிசீலனை செய்து அவரவர் தகுதிக்கேற்ப கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறினார் தீபா. அதிமுக அணிகள் இணையப் போகின்றன. இன்னுமா கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்து வருகிறார் தீபா என்று சம்பந்தப்பட்டவர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.