விண்ணப்பக் கட்டணம் மூலம் வசூலை வாரிக் குவிக்கும் கலைக் கல்லூரிகள்.. பெற்றோர்கள் குமுறல்
சென்னை: கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் கல்லூரிக்கு கல்லூரி மாறுபடுவதாக மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசுக் கல்லூரிகளில் ரூபாய் 27க்கு விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ரூபாய் 100, ரூபாய் 200, ரூபாய் 250 என்ற விலைகளில் விண்ணப்பங்கள் விற்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
விண்ணப்பங்களை வாங்க கல்லூரிகளில் மாணவர், பெற்றோர் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது. குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகளில் விண்ணப்பம் பெற வந்தவர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
அரசு கல்லூரிகளைப் பொருத்தவரை விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 25, பதிவுக் கட்டணம் ரூபாய் 2 என மொத்தம் ரூபாய் 27 செலுத்தி மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுச் சென்றனர்.
ஆனால், எழும்பூரில் அமைந்துள்ள பிரபல கல்லூரியில் ரூபாய் 100 க்கும், கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள கல்லூரியில் ரூபாய் 200 க்கும், செங்குன்றத்தில் அமைந்துள்ள கல்லூரியில் ரூபாய் 250 க்கும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.