அரசு பேருந்து விபத்து... ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் போராட்டம்: வீடியோ
கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்தனர். அங்கு ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வேபப்னஹள்ளி அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பயணிகள் பலத்த காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் அங்கிருந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஏப்ரி என்ற ஊருக்கு அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பனஹள்ளி அருகே உள்ள முருகன் கோயில் பகுதியில் பசு ஒன்று குறுக்கே வந்துள்ளது.
பேருந்து ஓட்டுநர், பசுவின் மீது பேருந்து மோதாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக் வேலை செய்யாத காரணத்தால் தடுமாறி மரத்தின் மீது மோதி நின்றுள்ளது. அதனால் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 25 பேர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து ஏற்பட்டு பல மணிநேரம் ஆன போதும், ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் அங்கிருந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகே ஆம்புலன்ஸ் வந்துள்ளது. தற்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.