களை கட்டும் தீபாவளி பண்டிகை: சொந்த ஊர் போக 2.25 லட்சம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு!
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இன்றும் நாளையும் பயணம் செய்ய நேற்று மதியம் நிலவரப்படி இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு 17 ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 9088 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்:
அதன்படி 17 ஆம் தேதி 501, 18 ஆம் தேதி 501 என கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று 699 எண் கொண்ட பேருந்தும், நாளை 1400 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
டிக்கெட்டுகள் முன்பதிவு:
இதற்கான முன்பதிவு கடந்த 17 ஆம் தேதியே துவங்கியது.இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
24 மணி நேர பணி:
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், " கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 400 போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி வரை 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
முன்பதிவிற்கு டோக்கன்:
9 நடைமேடைகளையும் கண்காணிக்க ஏற்கனவே 40 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 16 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் போலீசார்:
இதில் வண்டியின் நம்பர், புறப்படும் நேரம், எந்த நடைமேடை உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும்.மேலும் 25 முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2 லட்சத்திற்கு மேல் டிக்கெட்டுகள்:
இன்றும் நாளையும் பயணம் செய்வதற்கு இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிசிடிவி கேமராக்கள்:
போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனி கேபின் அமைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்.