கைதிகளிடம் சிக்கும் செல்போன்கள்: தமிழக சிறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்த முடிவு
சென்னை: சமீபத்திய சோதனைகளில் கைதிகளிடம் செல்போன்கள் கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் செல்போன் பேசுவதைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக போலீசார் எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தும் சிறைக்குள் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்திச்செல்வது, செல்போனில் திருட்டுத்தனமாக பேசுவது போன்ற அத்துமீறல்கள் தொடரத்தான் செய்கின்றன.
குறிப்பாக சிறைக்குள் இருந்தபடியே கைதிகள் செல்போனில் பேசி சதித்திட்டம் தீட்டி செயல்படுத்துவது, போலீசாருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, சிறை வளாகத்திற்குள்ளாக கைதிகள் திருட்டுத்தனமாக செல்போனில் பேசுவதைத் தடுக்க ஜாமர் கருவிகளைப் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சிறைத்துறை இயக்குனர் திரிபாதி எடுத்து வருகிறார்.
இந்த நடவடிக்கைகள் பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள பலன்கள் மற்றும் செல்போன் பேச்சை முழுமையாக தடுக்க அதிரடியாக அடுத்து நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் பற்றி சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
செல்போன் பேச்சை செயல் இழக்க வைத்து தடுக்கும் ஜாமர் கருவிகளை சிறைகளில் பொருத்தும் திட்டத்தை செல்படுத்த, கடந்த 2006-ம் ஆண்டு அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. 9 மத்திய சிறைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ.1½ கோடிதான் செலவு பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சென்னை புழல் சிறைக்குள் தற்காலிகமாக ஜாமர் கருவிகளை பொருத்தி ஒத்திகையும் செய்து பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இந்த திட்டத்தை தூசு தட்டி எடுத்து மீண்டும் நிறைவேற்றவும் ஆலோசனை நடந்து வருகிறது. சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்குகளை திறக்கும் திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.