4 ஆண்டு ஆட்சி.. 4 பக்க விளம்பரம்... பச்சக் கலரு ஜிங்குச்சா!
சென்னை: தமிழகத்தில் நான்கு ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ள அதிமுக அரசு, அதனைக் கொண்டாடும் வகையில் நாளிதழ்களில் நான்கு பக்க விளம்பரங்களைக் கொடுத்து ஜமாய்த்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதிமுக. நான்காவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா.
இடையே சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியது அதிமுக. தனது முதல்வர் பதவியை இழந்து சிறை சென்று ஜாமீனில் சென்னை திரும்பினார் ஜெயலலிதா. ஆனால், சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆனதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தமிழக முதல்வராக ஐந்தாவது முறை பதவியேற்றுள்ளார்.
4 ஆண்டு ஆட்சி...
இந்நிலையில், அதிமுக அரசு தமிழகத்தில் நான்கு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே, இந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்கள், பல முன்னணி நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
அம்மாவின் ஆட்சி...
நான்கு பக்க விளம்பரமாக வெளியாகியுள்ள இதில், ‘நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி, என்றும் அம்மாவின் ஆட்சி' என்ற வாக்கியம் எல்லாப் பக்கங்களில் இடம் பிடித்துள்ளது.
பச்சைக்கலர்...
விளம்பரத்தில் எழுத்துக்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் உள்ளன. புகைப்படங்களோடு அம்மாவின் சாதனைகள் இடம் பெற்றுள்ளன.
வெற்றி முடிவானது !
ஆனால், இந்த விளம்பரத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக அவர் கூறிய, ‘நமது லட்சியம் உயர்வானது ! நமது பார்வை தெளிவானது ! நமது வெற்றி முடிவானது' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.