பொதுத்தேர்வில் கலக்கிய அரசு பள்ளிகள்... ஆங்கில மீடிய பிரிவை அதிகரிக்க கல்வித்துறை உத்தரவு
நெல்லை: பன்னிரண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல அரசு பள்ளிகள் அபார சாதனை படைத்து வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் இப்பள்ளிகள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆங்கில வழி பிரிவில் கூடுதல் வகுப்புகளை தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில், பல இடங்களில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
இதனால், மக்களின் கவனம் அரசு பள்ளிகள் மீது திரும்பியுள்ளது. தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த சூழலில் தமிழக தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம், சீருடை, இலவச நோ்ட்டு புத்தகங்கள் அனைத்தும் பள்ளி திறக்கும் நாளே வழங்க வேண்டும்.
இலவச பஸ் பாஸ் தேவைப்படும் மாணவ மாணவியர் அனைவருக்கும் காலதமாதம் இல்லாமல் இலவச பயண அட்டை பெற்றுத்தர போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி திறப்பதற்கு இருதினங்களுக்கு முன்பாக தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து குடி தண்ணீர், கழிப்பிட வசதிகள் சரியாக உள்ளதாக என சரிபார்க்க வேண்டும்.
பள்ளி வாளகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் மின் அழுத்த கம்பிகள், மின் கசிவுகள், பழுதடைந்த கட்டிடங்கள், புல் புதர்கள் போன்றவை இல்லாமல் இருப்பதையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆங்கில வழி பிரிவு தொடங்கப்படும் வகுப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பொது தேர்வில் நிறைய அரசு பள்ளிகள் அபார சாதனை படைத்துள்ளது. அதுபோல் தனியார் மெட்ரிக் பள்ளிகளும் சாதனை படைத்துள்ளது. இதனை அரசு பள்ளிகளிலும் செய்ய ஆங்கில வழி பிரிவை அதிகரித்தால் தனியார் பள்ளிக்கு செல்லும் பெற்றோர் அரசு பள்ளிக்கு வந்து ஆங்கில பிரிவில் குழந்தைகளை சேர்ப்பார்கள். எனவே இதை அதிகரிக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.