மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள் மீது ஒரு கண் வையுங்கள்... அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னையில் பட்டம் விட உபயோகிக்கப்படும் மாஞ்சா நூல்களை தயாரிப்பவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் ஆர்.கோபிகா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "சென்னையில் காத்தாடி விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாஞ்சா நூல் அறுந்து சாலைகளில் விழுவது வழக்கமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு எழும்பூரில் தந்தையின் மோட்டார் சைக்கிளில் முன்பு உட்கார்ந்து பயணம் செய்த குழந்தையின் கழுத்தை இந்த நூல் அறுத்ததால், அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
வடசென்னையில் இதுபோல் மாஞ்சா நூல் அறுத்து இரு குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். எனவே, மாஞ்சா நூலை பயன்படுத்தி காத்தாடி விடுவதை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், காத்தாடி விடுவதற்காக ஒவ்வொரு வார்டிலும் தனியாக இடம் ஒதுக்க வேண்டும் அரசு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த ஹைகோர்ட், மாஞ்சா நூலை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், "கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி என்னுடைய தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, காத்தாடி வியாபாரி சங்கம், தமிழ்நாடு காத்தாடி பறக்க விடும் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் மாஞ்சா நூல் தயாரிக்க மாட்டோம் என்றும் மாஞ்சா நூல் மூலம் காத்தாடியை பறக்க விட மாட்டோம் என்றும் கூறினார்கள்.
மேலும், சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் காத்தாடி பறக்க விட தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. அவ்வாறு தனி இடம் ஒதுக்க முடியாது. மேலும், காத்தாடி பறக்கவிட சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவில், "மாஞ்சா நூலை யார் தயாரிக்கின்றனர்? அதை தயாரிக்க மூலப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது? இவற்றை எல்லாம் தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.