மதுரையில் ரூ1.75 கோடியில் பெண்களுக்கு தனி சிறை
சென்னை: மதுரையில் ரூ 1.75 கோடி செலவில் பெண்களுக்கு என்று தனி சிறை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் பெண் கைதிகளுக்காக ரூ.30 கோடி செலவில் புதிதாக தனிச்சிறைகள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., தமிழக அரசுக்கு அனுப்பிய முன்மொழிவில் ‘தற்போது சென்னை புழல், திருச்சி, வேலூர் ஆகிய சிறைகளில் மட்டும் தான் பெண்களுக்கு தனிச்சிறைகள் உள்ளன. மதுரையிலோ அதன் அருகாமை மாவட்டங்களிலோ பெண்களுக்கு தனிச்சிறைகள் இல்லை. மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்க்ளில் உள்ள கோர்ட்டுகளால் தண்டிக்கப்படும் பெண்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இவர்களை காணவரும் உறவினர்கள், வக்கீல்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும் திருச்சி சிறையில் அடைப்பட்டுள்ள விசாரணை பெண் கைதிகள், கோர்ட்டுகளில் ஆஜர்படுத்துவதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இவர்களுடன் செல்லும் பெண் போலீசாரும் நீண்ட தூரம் பயணிப்பதோடு விசாரணை முடிந்து தாமதமாகதான் மீண்டும் சிறைக்கு வர வேண்டியுள்ளது. எனவே மதுரையில் பெண்களுக்கு என்று தனிச்சிறைகள் அமைத்தால் மேற்கூறப்பட்ட பிரச்சினைகள் தீர்வதோடு போக்குவரத்து செலவும் மீதமாகும். எனவே 200 கைதிகளை அடைக்கும் விதத்தில் மதுரையில் பெண் சிறையை அமைக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், மதுரை மத்திய சிறையில் உள்ள 3-வது பிளாக்கை பெண்கள் தனிச்சிறையாக மாற்றிவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதோடு அந்த சிறைகளுக்கான பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கான குடியிருப்புகள் குறித்த செலவையும் அரசுக்கு கூடுதல் டி.ஜி.பி. அனுப்பியிருந்தார்.
முன்மொழிவை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, மதுரையில் சிறை கட்டிடம் கட்டவும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அமைப்பதற்கும் ரூ.1.75 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.