ஆளும் கட்சி விரும்பும் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டேன்...: விஜயகாந்த்
சென்னை: மின்சார வாரியத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்றால், அதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஐந்து மாதங்கள் ஆகின்றன. ஆனாலும், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடக்கவில்லை. இதுகுறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றன. அதைப் பற்றி எல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படுவதில்லை.
தாங்கள் நினைக்கும்போது சபையை கூட்டுவதும், விவாதிப்பதுமாக உள்ளனர். இது தான், ஜனநாயக நடைமுறையை அவர்கள் பின்பற்றும் பாங்கு. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் நானே. ஆனாலும், நான் ஒரு 'ரப்பர் ஸ்டாம்ப்'பாக இருக்க வேண்டும் என ஆளும் கட்சியினர் விரும்புகின்றனர். அது, நடக்காது. மின் வாரியம் மீது கூறப்படும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.