ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஆளுநர் ரோசய்யா அவதூறு வழக்கு
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழக ஆளுநர் ரோசய்யா சார்பில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த ஏப்ரல் 30-ந்தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், தமிழக ஆளுநர் ரோசய்யா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனியார் டிவிக்கு கடந்த ஏப்ரல் 30-ந்தேதி பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், துணை வேந்தர் பதவிக்கு ரூ.15 கோடியை ஆளுநர் வாங்குகிறார். அதில் ரூ.10 கோடியை ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு, மீதமுள்ள ரூ.5 கோடியை அவர் வைத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார்.
எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், ஆளுநர் மீது பொய்யான, உள்நோக்கத்துடன் அவதூறான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் மத்தியில் ஆளுநருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் மீது மாநில ஆளுநர் அவதூறு வழக்கு தொடர்வது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக ஆளுநர் ரோசய்யா தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்கொள்ள தயார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.