அப்பல்லோவிற்கு வந்த ஆளுநர் வித்யாசகர் ராவ் ... பத்தே நிமிடத்தில் திரும்பிச் சென்றார்!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோவிற்கு வந்து உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு வருகை தந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மாலையில் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவர உடல் நிலையை இதயவியல், நுரையீலர் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்தது. இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு 11 மணியளவில் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்று விட்டு நள்ளிரவு 12.02 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சரியாக 10 நிமிடங்கள் கழித்து
மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் . ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.