பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறைகள்: ஆக.3ல் திறப்பு?
சென்னை: பேருந்து நிலையங்களில் இன்று திறக்கப்படுவதாக இருந்த பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் வரும் 3ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவினால் இன்று திறக்கப்படுவதாக இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயணம் மற்றும் பணி நிமித்தமாக பாலூட்டும் தாய்மார்கள் வெளியே செல்லும் போது, பேருந்து நிலையங்களில் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டுவதற்கு வசதியாக அரசு பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் தனி அறைகள் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் 3ம்தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தாய்ப்பால் வார விழாவையொட்டி, ஆகஸ்டு 1ம்தேதி முதல் தனி அறைகளை திறக்க திட்டமிடப்பட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைக்கும் பணி பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் அருகிலும், 4வது நடைமேடை முகப்பிலும் நடைபெற்றது.
ஒரு அறையில் 7 பேர், மற்றொரு அறையில் 8 பேர் என மொத்தம் 15 தாய்மார்கள் சொகுசு இருக்கையில் உட்கார்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் குளு, குளு வசதியுடன் அறைகள் தயார்படுத்தப்பட்டது. சுத்தமான குடிநீர் வசதி, குழந்தைகளுக்கு உடைமாற்றுவதற்கு என்று சிறிய அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
தாய்ப்பால் வார விழா தொடக்க நாளான இன்று(சனிக்கிழமை) பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்துல் கலாம் மறைவால் தமிழக அரசு கடந்த 27ம்தேதி முதல் ஆகஸ்டு 2ம்தேதி வரை ஒரு வாரம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதால், பஸ் நிலையங்களில் தாய்மார்களுக்கு தனி அறை திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அறைகள் திறப்பு நிகழ்ச்சி 3ம்தேதி நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், நிகழ்ச்சியின்றி தானாகவே பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை திட்டமிட்டப்படி இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரலாமா? என்ற பரிசீலனையும் தமிழக அரசிடம் உள்ளதாக சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.