பணியில் கவனக்குறைவு, இடமாற்றம் செய்தால், தற்கொலையா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
திண்டுக்கல்: பணியிட மாற்றம் செய்யப்பட்ட காரணத்தால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெண் விஏஓ ஒருவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் துணை தாசில்தார்களும், தாசில்தாரும் டார்ச்சர் செய்த காரணத்தால்தான் தனது மகளின் தற்கொலை முடிவுக்குக் காரணம் என்று அவரது தந்தை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இருப்பினும் சமீப காலமாக கண்டித்தல், இடமாற்றம் செய்தால் தற்கொலை செய்வது அல்லது தற்கொலைக்கு முயற்சிப்பது என்பது அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது.
தமிழ்ச்செல்வி
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (38). ஒட்டன்சத்திரம் வட்டம் தேவத்தூர் கிராமத்தில் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். மேலும் ஒத்தையூர், பொட்டிக்காம்பட்டி, சிக்கமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களையும் கூடுதலாக கவனித்து வந்தார். இவரை வட்டாட்சியர் குமரேசன், துணை வட்டாட்சியர்கள் பழனிச்சாமி, பிரசன்னா ஆகியோர் பணி ரீதியாக தொந்தரவு செய்தனர் என்பது புகார்.
பணியிட மாற்றம்
வேடசந்தூர் வட்டம் நந்தகோட்டை கிராமத்திற்கு தமிழ்செல்வி சமீபத்தில் பணிமாற்றம் செய்தனராம். இதனால் தமிழ்ச்செல்வி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதிகளவில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தந்தை குற்றச்சாட்டு
இதுகுறித்து தமிழ்ச்செல்வியின் தந்தை வெள்ளைச்சாமி ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரில், ‘எனது மகள் தமிழ்ச்செல்வி தற்கொலை முயற்சிக்கு அதிகாரிகளின் தொந்தரவுதான் காரணம்' என்று கூறியுள்ளார். டெபுடி தாசில்தார்கள் பிரசன்னா, பழனிச்சாமி, தாசில்தார் குமரேசன் ஆகியோர் கடந்த ஒருமாதமாக டார்ச்சர் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாடகமாடுகிறார் - கோட்டாட்சியர் கீதா புகார்
அதே நேரத்தில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட பழனி கோட்டாட்சியர் கீதா, ‘தமிழ்ச்செல்வி விடுபட்ட ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கவனக்குறைவாக பணி செய்ததால் அவரை வட்டாட்சியர் குமரேசன் பணிமாற்றம் செய்துள்ளார். இதனால் இரு தூக்க மாத்திரைகள் மட்டுமே சாப்பிட்டு நாடகமாடி வருகிறார்' என்று கூறியுள்ளார்.
திருச்சியில் தற்கொலை முயற்சி
திருச்சியில் டிஎஸ்ஓ டார்ச்சர் காரணமாக ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முடிவெடுத்துள்ளதாக வந்துள்ள புகார் குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி கே.கே.நகர், ஓலையூர் ராஜமாணிக்கபிள்ளை தெருவை சோ்ந்தவர் சர்புதீன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா. ரேஷன் கடை விற்பனையாளர். இவர் கடந்த 2ஆம் தேதி முதல் கொட்டப்பட்டு செம்பட்டு ரேஷன் கடையில் பணியில் இருந்து வருகிறார்.
அதிகாரி தொந்தரவு
வழக்கம்போல், கடைக்கு நேற்று காலை பாத்திமா சென்றார். அப்போது, அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சக ஊழியர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி பாத்திமா கூறுகையில், நான் முதலில் ஓலையூரில் உள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக இருந்தேன். கடந்த 2ஆம் தேதி செம்பட்டு கடைக்கு மாற்றப்பட்டேன். ஓலையூரில் இருந்தபோது, அங்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்தின், இரட்டை அர்த்தத்தில் பொதுமக்கள் முன்னிலையில் திட்டினார். பின்னர் அங்கிருந்து செம்பட்டு கடைக்கு மாற்றம் செய்யப்பட்டேன். இங்கும் என்னை அதே போல் திட்டுகிறார். என்னால் தாங்க முடியாமல், தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன்'' என்றார்.
பணம் கையாடல் புகார்
இதுகுறித்து, டிஎஸ்ஓ ராஜேந்திரனிடம் கேட்டபோது, ‘'கடந்த சில தினங்களுக்கு முன் ஓலையூரில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு நடத்திய ஆர்ஐ கலைசெல்வி, இருப்பில் ரூ.16,175 குறைவாக இருப்பதாக என்னிடம் கூறினார். இதையடுத்து அங்கு விற்பனையாளராக உள்ள பாத்திமாவிடம், எப்படி பணம் குறைந்தது என விளக்கம் கேட்கப்பட்டது. பின்னர் செம்பட்டு கடைக்கு பணி மாறுதலாகி சென்றுவிட்டார். கடை பணத்தில் ரூ.2 ஆயிரம் குறைந்தால் சஸ்பெண்ட் செய்யலாம். ரூ.5 ஆயிரம் குறைந்தால் கைது செய்யலாம் என சட்டம் கூறுகிறது. இதை கூறியதால் என் மீது அபாண்டமாக பொய் புகார் கூறுகிறார்'' என்றார்.
மாவட்ட ஆட்சியர் விசாரணை
இதுபற்றி திருச்சி கலெக்டர் பழனிச்சாமி கூறும்போது, ‘'இரு தரப்பினர் புகார் குறித்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மிருளாணி, திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ரவிசந்திரன் ஆகியோரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை வந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
ஆபத்தான ஆயுதம்
"அதிகாரிகள் தொந்தரவு" என்பதற்கான அர்த்தம் தற்போது வேறு மாதிரியாக மாறி விட்டது. பணியில் தவறு செய்தால் அதிகாரிகள் கேட்பது சாதாரண நடைமுறைதான். பணியிட மாற்றம் செய்யப்படுவதும் அரசு பணியில் சாதாரண நிகழ்வுதான். ஆனால் இதையே ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு அதையெல்லாம் அதிகாரிகள் தொந்தரவு, டார்ச்சர் என்று கூற ஆரம்பித்தால் அரசு நிர்வாகம் செயல்பட முடியாமல் போய் விடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உயரதிகாரிகள் தொந்தரவு என்று கூறி அரசு ஊழியர்கள் தற்கொலை முயற்சி என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். உண்மையிலேயே நல்ல உயரதிகாரிகளுக்கு எதிரான ஆபத்தான ஆயுதமாக இது மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதும் கவலை தருகிறது.