தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என்ற கமல் கருத்தில் யாரும் தலையிட முடியாது... சொல்வது கவுதமி
நாட்டில் நல்லது கெட்டது எல்லாமே இருக்கிறது. கமல்ஹாசன் சொன்னது அவரது சொந்த கருத்து அதில் யாரும் தலையிட முடியாது என்று நடிகை கவுதமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என்று கமல்ஹாசன் சொன்னது அவருடைய சொந்தக்கருத்து என்று நடிகை கவுதமி கூறியுள்ளார். கமல் கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கமல் சொன்ன கருத்துதான் இப்போதைய அரசியல் பரபரப்பு. அமைச்சர்கள் கருத்துக்கு டுவிட்டரில் கமல் பதிவிட அதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்க என ஊடகங்களுக்கு தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது.
அரசியலுக்கு வரட்டும் கருத்து சொல்கிறேன் என்று கமல் கமெண்டுக்கு முதல்வர் பதிலளிக்க, நடிகர் கமலுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லை, டிவிக்கு வந்து விட்டார் என்றும் வயதான பின்னர் அரசியலுக்கு வர நினைக்கிறார் என்றும் அமைச்சர்கள் தினசரி ஒரு கருத்தை கூறி வருகின்றனர்.
அதிமுகவினர் ஒரு பக்கம் பொங்கிக் கொண்டிருக்க, பாஜகவின் எச்.ராஜாவும், தமிழிசை சவுந்தரராஜனும் மற்றொரு பக்கம் தனியாக கமலை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
எலும்பு டாக்டர்
முதுகெலும்பு இல்லாதவர் கமல் என்று எச். ராஜா கமெண்ட் அடிக்க, எலும்பு மருத்துவர் எச். ராஜா என்று பட்டம் கொடுத்தார் கமல். எல்லாமே பரபரப்பாக இருக்க ரசிகர்கள் ஒருபக்கம் போஸ்டர் ஒட்ட அவர்களை கட்டுப்படுத்த ஒரு ட்வீட்டை போட்டார் கமல்.
ஸ்டாலின் விஜயகாந்த்
தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என்று கமல் சொன்னது உண்மைதான் என்று ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின். கமல்ஹாசன் உண்மையைச் சொல்லியிருக்கிறார் என்று போட்டுத்தாக்கினார் விஜயகாந்த்.
கவுதமி கருத்து
இதனிடையே கமல் கருத்து குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கவுதமி, நாட்டில் நல்லது கெட்டது எல்லாமே இருக்கிறது என்றார். கெட்ட விசயங்கள் எவ்வளவு இருக்கிறதோ அதே போல நல்ல விசயங்களும் இருக்கின்றன.
தலையிட முடியாது
கமல் சொன்னது அவருடைய சொந்த கருத்து. அதில் யாரும் தலையிட முடியாது. நாட்டில் உள்ள நல்ல விசயங்கள் பற்றியும் மக்களுக்கு சொல்லாம் என்றார்.