விவசாயிகள், என்ஜீனியர், வக்கீல்.. கடலூர் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களில் 5 பேர் பட்டதாரிகள். படித்திருந்தாலும் அவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 5 பட்டதாரிகள், ஒரு என்ஜினியர், ஒரு வழக்கறிஞர் போட்டியிடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குறிப்பு விபரம் வருமாறு,
எம்.சி. சம்பத்
கடலூர் தொகுதியில் போட்டியிடும் எம்.சி. சம்பத்(58) எம்.எஸ்.சி. (வேதியியல்) படித்தவர். பண்ருட்டியில் உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த அவர் விவசாயம் செய்து வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் அவர் முன்னதாக 2001ம் ஆண்டு தேர்தலில் நெல்லிக்குப்பத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார்.
மேலும் 2011ம் ஆண்டு தேர்தலில் கடலூர் தொகுதியில் வெற்றி பெற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்தார்.
சொரத்தூர் ரா.ராஜேந்திரன்
குறிஞ்சிப்பாடியில் போட்டியிடும் சொரத்தூர் ரா.ராஜேந்திரன்(55) பி.ஏ. படித்துவிட்டு வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். அவரின் சொந்த ஊர் சொரத்தூர். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளரான அவர் 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குறிஞ்சிப்பாடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கே.ஏ.பாண்டியன்
சிதம்பரத்தில் போட்டியிடும் கே.ஏ.பாண்டியன்(55) எம்.ஏ. தமிழ் படித்தவர். அவரின் சொந்த ஊர் குமராட்சி பகுதியில் உள்ள கீழக்கரை. வன்னியரான அவர் விவசாயம் செய்து வருகிறார். அவர் தற்போது குமராட்சி ஒன்றியக்குழு தலைவராக உள்ளார்.
காட்டுமன்னார்கோவில் - முருகுமாறன்
காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன் வயது 40.
பி.எஸ்சி. விவசாயம், பி.எல். படித்துள்ள இவர் முன்னாள் அரசு ஊழியர். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் காட்டுமன்னார்கோவில்.
இவருக்கு நளினி என்ற மனைவியும், ஜெயமுகில்வண்ணன், ஜெயமணிமாறன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அதிமுகவில் கடலூர் மேற்கு மாவட்ட துணைச்செயலாளராக இருக்கிறார். 2011ம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
செல்வி ராமஜெயம்
புவனகிரியில் போட்டியிடும் செல்வி ராமஜெயம் (50) 10ம் வகுப்பு படித்துள்ளார். அவரின் சொந்த ஊர் அகரம் பரங்கிப்பேட்டை. விவசாயம் செய்யும் அவர் வன்னியர் குலத்தை சேர்ந்தவர். கடலூர் மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளரான அவர் 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வி.டி.கலைச்செல்வன்
விருத்தாசலத்தில் போட்டியிடும் வி.டி. கலைச்செல்வன்(48) ஒரு பி.எஸ்.சி. பட்டதாரி. அவரின் சொந்த ஊர் விருத்தாசலம். விவசாயம் செய்து வரும் கலைச்செல்வன் எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் உள்ளார். அதிமுக விருத்தாசலம் நகரச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.
பெ.அய்யாசாமி
சிவில் என்ஜினியரான பெ.அய்யாசாமி(43) திட்டக்குடியில் போட்டியிடுகிறார். சிறுபாக்கம் பகுதியில் உள்ள எஸ்.புதூர் தான் அவரது சொந்த ஊர். அவர் கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். அய்யாசாமி முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமியின் மகன் ஆவார்.
இரா.ராஜசேகர்
சொரத்தூரை சேர்ந்த இரா.ராஜசேகர்(50) நெய்வேலியில் போட்டியிடுகிறார். பி.எஸ்.சி., பி.எல். படித்துள்ள அவர் வன்னியர் குலத்தை சேர்ந்தவர். வழக்கறிஞரான அவர் கடலூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவராக உள்ளார்.
சத்யா பன்னீர்செல்வம்
பண்ருட்டியில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்த சத்யா பன்னீர்செல்வம்(44) பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். வன்னியரான அவர் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். பண்ருட்டி 21வது வார்டு மேலவைப் பிரதிநிதியான அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.