வலைதளங்களில் கொண்டாடப்படும் தமிழர் பாரம்பரிய இசை.... 5 லட்சம் பேர் கண்டுகளித்த வீடியோ!
தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை 5 லட்சம் பேர் வலைதளங்களில் கண்டுகளித்துள்ளனர்.
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய இசையும் இசைக்கருவிகளும் அழிந்து வரும் சூழ்நிலையில் நடத்தப்பட்ட மகுடம் வல்லிசை நிகழ்ச்சி வீடியோவை வலைதளங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். 22,000 பேர் அதனை தங்கள் வலைப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
தமிழர்களுக்கென தனித்துவமான இசையும் கலையும் பண்பாடும் கலாச்சாரமும் இருப்பதால் தான் உலகில் தமிழோடு தோன்றிய கிரேக்கம்,லத்தின் உள்ளிட்ட மொழிகளும் கலாச்சாரமும் முற்றிலும் அழிந்துபோன நிலையில் தமிழ் உலகின் தொன்மையான மொழியாகவும் கலச்சாரமாகவும் திகழ்ந்து வருகிறது.
தமிழர் வாழ்வில் தாரை, தப்பட்டை, பறை, நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட சில இசைக்கருவிகளைத் தவிர வேறு இசைக்கருவிகளை இன்றைய தலைமுறையினர் அறியமாட்டார்கள். ஆனால் சங்ககால இலக்கியத்திலிருந்து கடந்த நூற்றாண்டு வரை தமிழர் வாழ்வில் தோல் கருவிகள், துளை கருவிகள், நரம்பு கருவிகள் என இசைக்கருவிகளில் பல வகைகள் இருந்தன. போர் தொடங்கும் முன்னே பலவித முரசுகளைக் கொட்டி, வீரர்களை உற்சாகப்படுத்தும் கலாச்சாரம் தமிழர் மரபில் இருந்துள்ளது.
இன்றைய தலைமுறைக்கு தமிழரின் பாரம்பரியத்தையும் தொன்மையும் விளக்கும் வண்ணம், தமிழர் சான்றோர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார் தமிழ் ஆர்வலர் மறைந்த அருணாச்சலம். அவருடைய மகன் சவுரிராஜன் மேற்கத்திய இசையில் நாட்டம் கொண்டிருக்கும் இன்றைய நவீனயுக தமிழ் இளைஞர்களுக்கு தமிழிசையை அறிமுகப்படுத்தும் நோக்கில் மகுடம் தமிழ் வல்லிசை என்ற நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு இசைக் கலைஞர்களையும் இசைக்கருவிகளையும் கொண்ட பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
அதில் பலநூறு இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு மிக அற்புதமான வகையில் இசைக்கருவிகளை இசைத்துக் காட்டினர். அது பார்வையாளர்களை நெக்குருக வைத்தது. அந்த நிகழ்ச்சியை வலைதளத்தில் அப்லோட் செய்துள்ளனர். கடந்த 20 நாட்களில் இந்த வீடியோவை 5 லட்சம் பேர் இதுவரை கண்டு களித்துள்ளனர். மேலும் 22,000 பேர் அதனை ஷேர் செய்துள்ளனர்.
வீடியோ: