அநியாயத்திற்கு மண் அள்ளியதால் 22 கிராமங்களில் நிலத்தடி நீர் காலி... வறண்டு போன ஆத்தூர் ஒன்றியம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் நீர்சத்துள்ள மண்ணை லாரிகளில் சரமாரியாக அள்ளி எடுத்து விட்டதால், 22 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கருங்குளம், நடுக்குளம், போலசமுத்துரகுளம், கதிரியான்குளம், அத்திக்குளம், செங்குளம், புல்வெட்டி கண்மாய், அம்பாத்துறை கண்மாய் ஆகிய குளங்களில் டிப்பர் லாரிகள் மூலம் தினந்தோறும் 50 லோடுகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் நீரை தேக்கி வைக்கும் நீர்சத்துள்ள மண் அள்ளப்படுவதால் சுக்கான் சட்டு வரை சுரண்டப்படுவதால் மழைகால தண்ணீர் தேங்காமல் ஆவியாகின்றது. இதன் காரணமாக இந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கண்மாய்கள் நிரம்பியது. மேலும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக நிலத்தடி நீர் நன்றாக இருக்கும் என்றும் வரும் கோடை காலத்தை சமாளித்து விடலாம் என இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் இந்த ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் நீர்சத்துள்ள மண்கள் அனைத்தும் கனரக மண் அள்ளும் இயந்திரம் மற்றும் பொக்கலைன் மூலம் அனுமதியின்றி அள்ளப்படுகின்றது.
நாள் ஒன்றிற்கு 50 லோடுகளில் மண் அள்ளப்படுகின்றது. இந்த மண்கள் அனைத்தும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கு பின்னால் பெரிய அரசியல் பிரமுகர்கள் ஆளுங்கட்சியினர் என உள்ளதால் கிராம மக்கள் எதுவும் பேசமுடியாத நிலையில் உள்ளனர்.
கண்மாய்களில் மண் அள்ளுவதை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளுவது இல்லை. இதன் காரணமாக பாளையங்கோட்டை சேடபட்டி பிறவான்பட்டி கூலம்பட்டி ஆத்தூர் மல்லையாபுரம் அக்கரைப்பட்டி சித்தையன்கோட்டை சொக்கலிங்கபுரம் அலகர்நாயக்கன்பட்டி நரசிங்கபுரம் பாறைபட்டி போடிக்காமன்வாடி வீரசிக்கம்பட்டி அம்பாத்துறை நடுப்பட்டி உள்ளிட்ட 22 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளது.
தற்போது குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம பெண் சித்திரா கூறும் போது நீர்சத்துள்ள மண் கொள்ளையில் சிலர் அதிகாரத்துடன் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த 22 கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு இந்த பகுதியில் நடைபெறும் மண் கொள்ளையை தடுத்து மண் கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மண் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.