ஓபிஎஸ் கோஷ்டி ஆதரவுடன் தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்- திமுக எதிர்ப்பு!
தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.
சென்னை: தமிழக சட்டசபையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த தமிழக சட்டசபை கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே ஜிஎஸ்டி மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார்.
திமுக எதிர்ப்பு
இன்று தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட்டது. ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றக் கூடாது; பொறுப்புக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அமைச்சர் மறுப்பு
ஆனால் நிதிஅமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டியால் பாதிப்பு ஏற்பட்டால் மறு ஆய்வு செய்யப்படும் என்றும், அந்த வரியால் வர்த்தகர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. எனவே பயம் வேண்டாம் என்றார்.
திமுக வெளிநடப்பு
பின்னர் ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
ஓபிஎஸ் கோஷ்டி ஆதரவு
ஆனால் ஓபிஎஸ் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தனர். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், புரிதல் இல்லாமல் ஜிஎஸ்டி மசோதாவை திமுகவினர் எதிர்க்கின்றனர். ஜிஎஸ்டியால் வரிவருவாய் கூடுதலாக கிடைக்கும் என்றார்.