ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணித்த காங்., திமுக.. அருண்ஜேட்லி கடும் கண்டனம்
டெல்லி: ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் பங்கேற்காத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வருகிற 30ம் தேதி நள்ளிரவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் அறிமுக விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாளை இரவு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. பாஜக கூட்டணிக் கட்சிகள் இதில் பங்கேற்க உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். மேலும் அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி விழாவில் பங்கேற்காத காங்கிரஸ், திமுகவுக்கு அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது எனவும் எதிர்கட்சிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறுகையில், ஜி.எஸ்.டி வரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவேண்டாம். இந்த வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் உயரும். ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் எதிர்ப்புகளால் பணவீக்கம் மற்றும் ஜி.டி.பியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஜிஎஸ்டி விழாவை புறக்கணிக்கும் காங்கிரஸின் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறினார்.
ஜிஎஸ்டி விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்ட்ரீய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் ஆகியோரும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.