மாதா மாதம் ரூ. 20 லட்சம்.. சென்னை போலீஸாரை கரன்சிகளால் குளிப்பாட்டிய குத்கா வியாபாரிகள்.. பரபர தகவல்
குட்கா வியாபாரிகளிடம் மாமூல் பெற்ற விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சென்னை : செங்குன்றம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாதாவரத்தில் கடந்த 2011 முதல் இயங்கி வந்த குட்கா குடோனில் கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
அப்போது குட்கா வியாபாரியின் ரகசிய டைரியும் வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அந்த டைரியில் சென்னை முழுவதும் குட்கா வியாபாரம் தடையின்றி நடக்க இன்ஸ்பெக்டர்கள் முதல் காவல்துறை ஆணையர்கள் வரை பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பெயருடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் தமிழக அரசுக்கு அறிக்கையும் 30 அதிகாரிகள் கொண்ட பட்டியலும் அனுப்பியது. அதன்படி தமிழக உள்துறை செயலாளர் 30 அதிகாரிகளையும் விளக்கம் அளிக்கும் படி அறிக்கை அனுப்பியது.
பட்டியல் தயாரித்த ஜார்ஜ்
அப்போது சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ், இந்த மோசடிக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, மாவா மற்றும் குட்கா வியாபாரிகளிடம், யார் யார் லஞ்சம் வாங்கினார்கள் என்ற பட்டியலை தயார் செய்து கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி தமிழக முதன்மை செயலாளருக்கு அனுப்பினர்.
யார் யாரிடம் விசாரணை
அதில் கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை சென்னை மாநகர கமிஷனர்கள் 4 பேர், கூடுதல் கமிஷனர்கள் 6 பேர், இணை கமிஷனர்கள் ஐவர், துணை கமிஷனர்கள் 6 பேர், உதவி கமிஷனர்கள் 3பேர் மற்றும் செங்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
மேலும் குட்கா வியாபாரிகளிடம் நேரடியாக தொடர்பில் இருந்த உதவி கமிஷனர்களாக இருந்த கந்தசாமி மற்றும் மன்னர்மன்னன் ஆகியோரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது லஞ்சம் ஒழிப்புத்துறை சார்பில் தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் கலக்கம்
கடந்த 2011 முதல் 16 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்களாக திரிபாதி, டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் பதவி வகித்துள்ளனர். இந்த விசாரணையால் பல உயர் போலீஸ் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
யாருக்கு சிக்கல்
தற்போது தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் உள்ளார். குட்கா வியாபாரிகள், விற்பனையாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை தொடங்கி உள்ளது. இந்த விசாரணையில் போலீஸ் அதிகாரிகள் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.