ஐ.டி மக்களின் அமெரிக்க மோகம்... 5 நாளில் எச் 1பி விசா விண்ணப்பங்கள் காலி!
சென்னை: அமெரிக்காவுக்கு அடுத்தாண்டு பணி நிமித்தம் பயணம் மேற்கொள்வதற்காக எச் 1பி விசா விண்ணப்பக்கள் பெறப் படுவது தொடங்கிய ஐந்தே நாட்களில் நிர்ணயித்த வரம்பை தொட்டு விட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணி நிமித்தம் பயணம் மேற்கொள்வதற்கு எச் 1பி விசா வழங்கப்படுகிறது. அடுத்தாண்டு பயணம் மேற்கொள்வதற்கு கடந்த ஒன்றாம் தேதி முதல் விசா விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.
ஆனால், அதிகளவில் இந்தியர்கள் பணிநிமித்தமாக அமெரிக்கா செல்லும் ஆவலில் உள்ளார்கள் போலும். ஏனேனில் விண்ணப்பங்கள் பெறப்படுவது தொடங்கப்பட்ட ஐந்தாவது நாளிலேயே அடுத்தாண்டுக்கான நிர்ணய வரம்பு எட்டப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
65 ஆயிரம் விசாக்கள்....
அமெரிக்காவுக்கு பணி நிமித்தம் செல்பவர்களுக்கு ஆண்டுதோறும் 65 ஆயிரம் எச்- 1பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எச் 1பி விசா....
அமெரிக்காவில் 2014 - 15ம் நிதியாண்டு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் அந்தாண்டுக்கான எச்- 1பி விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டு குடியேற்றத் துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
க்யூவில் நின்ற விண்ணப்பதாரர்கள்....
அதன்படி, கடந்த ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்கூட்டியே ஏராளமானோர் அமெரிக்க தூதரகம் முன்பு வரிசையில் காத்திருக்க ஆரம்பித்தனர்.
திருப்பி அனுப்பப்படும்...
வரிசையில் நின்று தங்களது விசா விண்ணப்பங்களை அவர்கள் அளித்தனர். தேர்வு செய்யப்படாத விண்ணப்பங்கள் பதிவுக் கட்டணத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.
எதிர்பார்ப்பு...
அனுமதியளிக்கப்பட்டுள்ள மொத்தம் 65,000 விசாக்களுக்கு இந்தாண்டு 1,60,000 விண்ணப்பங்கள் வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டுகளில்...
இது கடந்த 2012-ம் ஆண்டில் 1,34,000 ஆகவும், கடந்த ஆண்டு 1,24,000 ஆகவும் இருந்தது. இந்த விண்ணப்பங்கள் கடந்த 2001-ம் ஆண்டில் உயர்ந்த பட்ச அளவாக 2,01,000 ஆக இருந்ததாக யுஎஸ்சிஐஎஸ் குறிப்பிடுகின்றது.
ஐந்து நாட்களிலேயே...
இந்நிலையில் விண்ணப்பங்கள் பெறத் தொடக்கிய ஐந்து நாட்களிலேயே அமெரிக்கா நிர்ணயித்திருந்த வரம்பை அடைந்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு...
கடந்த 2008ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் விண்ணப்பங்கள் பெற ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே அதன் உச்சவரம்பை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர்ஸ்...
அமெரிக்கா செல்லும் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர்ஸ்களின் எண்ணிக்கை அடுத்தாண்டு 7.8 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவர்களின் சம்பள விகிதம் 92,750 அமெரிக்க டாலர்களிலிருந்து 133,500 அமெரிக்க டாலர்கள் வரை உயரலாம் எனத் தெரிகிறது.
அதிக சம்பளம்...
அதே போல் சாப்ட்வேர் டெவலப்பர்ஸ்களின் எண்ணிக்கை 7.7 சதவீதமும், அவர்களது சம்பளம் 80,250 அமெரிக்க டாலர்களில் இருந்து 127,250 டாலர்கள் வரை உயரலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு மோகம்....
இதன்மூலம், அதிக சம்பளம் உள்ளிட்ட வசதிகளால் இந்தியர்கள் பலர் அமெரிக்கா செல்வதில் ஆர்வமாக உள்ளது வெளிப்படையாகத் தெரிய வருகிறது.