அறிவாலயத்தில் எச். ராஜா.. மு.க.ஸ்டாலினை சந்தித்து மணி விழாவுக்கு அழைத்தார்!
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்துப் பேசினார்.
இருவருமே ஒருவருக்கொருவர் விமர்சித்து வந்த நிலையில் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. தனது மணி விழாவுக்கு அழைப்புவிடுக்கவே எச்.ராஜா வந்திருந்தார்.
சமீபகாலமாக ஆளும் கட்சியினருக்கும், ஸ்டாலினுக்கும் இடையேயான வார்த்தை மோதல்களைவிட ராஜா மற்றும் ஸ்டாலின் நடுவேதான் வார்த்தை மோதல்கள் அதிகமாக உள்ளன.
இந்த நிலையில் இருவருமே சந்தித்தது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஸ்டாலினுடன் இம்மியளவும் அரசியல் பேசவில்லை என்றார். தனது மணிவிழாவுக்கு அழைக்கவே ஸ்டாலினை சந்தித்ததாகவும் எச். ராஜா கூறினார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்ததாகவும் எச். ராஜா கூறினார். அரசியல் கருத்து வேறுபாடு வேறு, நட்பு வேறு என்றும் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.