ஐஐடி மாணவர்களுக்கு கருணாநிதி, வைகோ,வீரமணி வக்காலத்து வாங்குவது ஏன்? கேட்கிறார் ஹெச். ராஜா
காரைக்கால்: ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் கல்லூரி நிர்வாகம் அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை விதித்துள்ளது என்று கூறியுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இந்த விவகாரத்தில் கருணாநிதி, வைகோ,கி.வீரமணி எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, மோடி தலைமையிலான ஒரு வருட ஆட்சியில் பல மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கூறும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் 5 ஆயிரம் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தினுள் இந்து மதம் அழிக்கப்பட வேண்டும் என்று துண்டு பிரசுரம் வெளியிட்ட தீபக் ஜான்சன் என்ற மாணவர் தலைமையில் இயங்கும் அமைப்பைதான், கல்வி நிறுவன வளாகத்தில் மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில், கல்லூரி நிர்வாகம் அந்த அமைப்பு கல்லூரி வளாகத்தில் செயல்படக்கூடாது என்று தடை விதித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த தடையை ஏதோ பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது போன்று கருணாநிதி, வைகோ மற்றும் வீரமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பது கேலிக்குரியது. அம்பேத்கார் தேசியவாதி, நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். ஆனால், பெரியார் சுதந்திர தினத்தை கருப்பு தினம் என்று தங்களது நாளேட்டில் தலைப்பு செய்தியாக வெளியிட்டவர். இருவரது பெயரையும் இணைத்து அமைப்பு நடத்துவது என்பதே ஏமாற்று வேலை என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்படி இது போன்ற செயலுக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் கருணாநிதி, வைகோ,கி.வீரமணி எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என்றும் ராஜா தெரிவித்தார்.