அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எதற்கு?.... நான் இருக்கேன்ல... சொல்வது ஹெச். ராஜா
தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எதற்கு? நானே அந்த இடத்தை நிரப்புவேன் என்று பாஜகவின் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் எதற்கு நானே அந்த இடத்தை நிரப்புவேன் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பசுவதை தடுப்பு பிரிவு என்ற அமைப்பு மாடுகளுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று களத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்திலும் இப்போது பசு பாதுகாவலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மணப்பாறையில் இருந்து, பழனி வழியாக பொள்ளாச்சி தேவனூர்புதூருக்கு 7 பசுங்கன்றுகளை ஏற்றி சென்ற வாகனத்தை, மன்னார்குடி வைஷ்ணவ மடத்தை சேர்ந்த செண்டலங்கார செண்பக ஜீயர் என்பவர், தடுத்து பழனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதை அறிந்து பழனி காவல்நிலையத்தில் ஜீயருக்கு ஆதரவாக இந்து அமைப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் குவிந்தனர். ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காவல்நிலையத்தில் இருந்து ஜீயர் வெளியேறும்போது, அவர் சென்ற வாகனத்தின் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல மற்றொரு தரப்பினரும் சாலைமறியல் செய்தனர். இதைத் தொடர்ந்து பேருந்து மீது திடீரென கற்கள் வீசப்பட்டதால், கலவரத்தை கட்டுப்படுத்த அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தால் பழனி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன பதற்றம் உருவானது.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று பழநி வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் அரசு நிர்வாகம் கெட்டுவிட்டதைப் போல, நீதித்துறையும் கெட்டுவிட்டதா? என்று கேட்டார்.
Recommended Video
பழநி சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறை, ஆம்பூர் கலவரத்தில் ஏன் தடியடி நடத்தவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
திடீரென என்ன யோசித்தாரோ, தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எதற்கு? நானே அந்த இடத்தை நிரப்புவேன் என்றும் கருத்து கூறினார்.
தமிழக அரசியலில் நுழைய ரஜினிக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று இதே ஹெச் ராஜாதான் கருத்து கூறினார். இப்போது இவரே ரஜினி எதற்கு என்று கேட்டுள்ளார்.
ஏதேது விட்டால் பாஜக ஆட்சியில் நான்தான் முதல்வர் என்று சொன்னாலும் சொல்வார் ராஜா என்று பேசிக்கொள்கின்றனர் பாஜக தொண்டர்கள். முதல்வர் ரேஸில் இப்போதே முந்திக்கொண்டார் ஹெச். ராஜா.