வைகோவின் நாக்கை அடக்க பாஜக தொண்டனுக்கு தெரியும்: ஹெச். ராஜா எச்சரிக்கை
காரைக்குடி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கடுமையாக விமர்சிக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ நாவை அடக்க வேண்டும் இல்லையெனில் அவர் நாவை அடக்குவது எப்படி என்று பாஜக தொண்டனுக்கு தெரியும் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, மோடி மற்றும் ராஜ்நாத்சிங்கை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு தூக்கி எறியும் முன்பாக வைகோ கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.
இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, வைகோ தடித்த வார்த்தைகளால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனியும் இப்படி நாவடக்கம் இல்லாமல் பேசிவிட்டு வைகோ பாதுகாப்பாக சென்றுவிட முடியாது.
வைகோ நாவை அடக்காவிட்டால் வைகோவின் நாவை அடக்குவது எப்படி என்று பாஜக தொண்டனுக்குத் தெரியும் என எச்சரிக்கிறேன் என்றார்.