தமிழக சாலைகள் ஏன் இவ்வளவு மோசமா இருக்கு?: ஹைகோர்ட் வேதனை
சென்னை: தமிழகத்தில் உள்ள சாலைகள் ஏன் இவ்வளவு குண்டும் குழியுமாக மோசமாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளது.
மோசமான சாலைகள் குறித்து கடுமையாக சாடிய உயர் நீதிமன்றம், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளின் அவலங்கள் குறித்து பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
அதேபோல் அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்று, சென்னையில் மாநகரில் உள்ள குண்டும், குழியுமான சாலைகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இதைப் பார்த்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சாலைகள் குறித்து பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், அரசு பிளீடர் மூர்த்தி ஆஜரானார். அவரிடம் அந்த ஆங்கில பத்திரிகையைக் காட்டிய நீதிபதிகள், ''இந்த செய்தியை பாருங்கள். சென்னையில் எப்படி சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இப்படி இருந்தால் மக்களால் சாலையில் நிம்மதியாக செல்ல முடியுமா? இதனால் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்று கேட்டனர்.
இந்த சாலைகளை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. இந்த சாலைகளை எப்போது சரி செய்யப்படும். மாநகராட்சி என்னதான் செய்து கொண்டு இருக்கிறது. இங்கு மட்டும்தான் சாலைகள் இப்படி இருக்கிறதா? அல்லது தமிழகம் முழுவதுமே சாலைகள் மோசமாகத்தான் உள்ளதா? என்று சராமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் உள்ள சாலைகள் நிலைமை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறோம். எனவே, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் தரமான சாலைகள் அமைப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று விளக்கம் அளிக்க வேண்டும். இதுசம்பந்தமான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்'' என்று கூறினர்.
இதையடுத்து, ஆஜரான அரசு பிளீடர் மூர்த்தி, ‘‘அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் வேண்டும்'' என்றார். அதற்கு நீதிபதிகள், ''இன்னும் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.