ஸ்டாலினை கட்சராயன் ஏரியை பார்வையிட விடாமல் தடுப்பது எது? சட்டமா? கவுரமா? - ஹைகோர்ட்
கட்சராயன் ஏரியை பார்வையிடச் சென்ற ஸ்டாலினை தடுத்தது எது? சட்டப்பிரச்சினையா? கவுரவப்பிரச்சினையா என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
சென்னை: திமுகவினர் தூர்வாரிய ஏரியை ஸ்டாலின் பார்வையிடுவதில் தவறு என்ன உள்ளது. அவரை தடுத்தது சட்டப்பிரச்சினையா? கவுரவப்பிரச்சினையா என்று தமிழக அரசை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட்டு பின்னர் சேலத்தில் நடக்கவிருந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க கடந்த வாரம் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஏரியை பார்வையிடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
கடந்த வாரம் சென்னையிலிருந்து கோவை சென்ற ஸ்டாலின், கோவையில் இருந்து சேலம் போகும் வழியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுபற்றி உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு விசாரணைக்கு வரும் முன்னரே ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார்.
திமுக வழக்கு
இந்நிலையில் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஏரிகளை தூர்வாருவதற்கு ஸ்டாலினுக்கு தடைவிதிக்கக் கூடாது என்று திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் விசாரணை
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், ஸ்டாலின் ஏரிகளை பார்வையிட செல்லும்போது குழுவாக செல்வதால் சட்டம் ஒழுங்கு கெட வாய்ப்பிருக்கிறது என்று தகவல் வந்ததால் கைது செய்தோம் என்று பதிலளிக்கப்பட்டது.
பதில் அளிக்க உத்தரவு
திமுக சார்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் பார்வையிட சென்றபோது எங்கும் சட்டம் ஒழுங்கு கெட்டதாக தகவல் இல்லை. இந்நிலையில் தூர்வாரும் பணியைப் பார்வையிட சென்ற ஸ்டாலினை போலீசார் தடுத்து நிறுத்தியது ஏன்? சேலம் மாவட்ட காவல்துறை இன்று மதியம் 2.15 மணிக்கு இதுபற்றி உரிய தகவல்களுடன் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தடுப்பது எது?
இன்று பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏரி அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியா என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலினை ஏரிக்கு செல்லவிடாமல் தடுப்பது சட்டப்பிரச்சினையா, கவுரப்பிரச்சினையா என்று கேள்வி எழுப்பினர். தமிழக அரசு ஆகஸ்ட் 7க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.