சிபிஐ சம்மனுக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு- ஜூலை 28 வரை ஆஜராக விலக்கு!
கார்த்தி சிதம்பரம் வரும் 28-ந் தேதி வரை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை சிபிஐ முன்பு ஆஜராவதில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியது முறைகேடு நடந்தது என்பது சிபிஐ புகார். ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்த ஒப்புதலுக்காக கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ90 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்கிறது சிபிஐ.
இதனைத் தொடர்ந்தே கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சிபிஐ தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் கார்த்தி சிதம்பரம் தமக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை வரும் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரும் 28-ந் தேதி வரை கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு ஆஜராகவும் விலக்கு அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.