'மெர்சல்' படத்துக்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை!
Recommended Video
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில், 'மெர்சல்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஏ.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
இதுகுறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 'மெர்சல்' படத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
என்ன வழக்கு :
கடந்த 2014- ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் 'மெர்சல் ஆயிட்டேன்' எனும் பட டைட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 'மெர்சல்' டைட்டில் பதிவு செய்வதற்கு அந்நிறுவனம் ஆட்சேபனை தெரிவிக்கவே, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் நேரடியாக ட்ரேட்மார்க்கில் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றிருக்கிறது தேனாண்டாள் நிறுவனம்.
டைட்டில் பிரச்னை :
ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் ஏற்கெனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் தகுந்த பதில் கிடைக்காததால் அந்நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். தங்களது படத்தின் டைட்டிலைப் போன்றே வைக்கப்பட்டிருக்கும் 'மெர்சல்' டைட்டிலால் தங்களது படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
மெர்சல் தரப்பு விளக்கம் :
வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படாத நிலையில் மெர்சல் நிர்வாகம் சார்பில் தானாக முன்வந்து வாய்மொழி விளக்கத்தைக் கொடுத்தார்கள். என்ன காரணத்திற்காக ட்ரேட்மார்க்கில் பதிவு செய்யப்பட்டது என்பதையும், டைட்டில் குறித்து மேலும் விளக்கவும் கால அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது.
இருதரப்பு வாதம் :
பல கோடி ரூபாய் செலவு செய்து தற்போது மெர்சல் படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
விளம்பரம் செய்யக்கூடாது :
இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் 'மெர்சல்' தொடர்பான எந்த விளம்பரங்களையும், வியாபார முயற்சிகளையும் அதுவரை செய்யக் கூடாது என உத்தரவிடப் பட்டிருக்கிறது.
விசாரணை ஒத்திவைப்பு :
அக்டோபர் 3-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. அன்றைய தினம் 'மெர்சல்' படத்தின் மீதான தடை நீக்கப்படுமா என்பது தெரியவரும். இந்தச் செய்தி விஜய் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.